

பாகுபலி மூலம் உலக சினிமாவை திரும்பிப்பார்க்க வைத்த ராஜமௌலி தனது ஒவ்வொரு படத்திலும் அதிக பிரமாண்டத்தை புகுத்தி வருகிறார்.
கடைசியாக ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து, மகேஷ் பாபுவை வைத்து வாரணாசி படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வாரணாசி திரைப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். பிரபல நடிகர் பிருத்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
துர்கா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.
80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் படப்பிடிப்புடன் விஎப்எக்ஸ் பணிகளும் தற்போது நடைபெற்று வரும் சூழலில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை ராஜமௌலி அண்மையில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இது ஒரு பெரிய ஆக்ஷன் சாகசத் திரைப்படம் என்றும், இதில் டைம் டிராவல் அம்சமும் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
கதை வாரணாசியில் தொடங்கி, அண்டார்டிகா மற்றும் ஆப்பிரிக்காவிற்குப் பயணித்து, அங்கிருந்து ராமாயண காலத்திற்குச் சென்று மீண்டும் வாரணாசிக்குத் திரும்புவதாகவும் 2022 முதல் கிட்டத்தட்ட நானரை ஆண்டுகளாக இந்தக் கதையை மெருகேற்றி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு இந்தியானா ஜோன்ஸ் போன்ற சாகசக் கதைகள் மிகவும் பிடிக்கும் என்றும், இந்தப் படமும் அதே பாணியில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
படத்தில், அண்டார்டிகாவில் உள்ள 300 அடி உயர பனிமலை மற்றும் இராமாயண காலத்தின் பிரம்மாண்டமான வானரப் படை போன்ற காட்சிகளை எடுக்க ஐமேக்ஸ் கேமராக்கள் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தனது படங்களில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாக குறிப்பிட்டார்.