வினாத்தாள் கசிவு தீவிரமான பிரச்சனை; பாதிக்கப்பட்டவர்களுக்காக வருந்துகிறேன்: சல்மான் கான்

ஆர்வத்தை வெளிப்படுத்திய மாணவர்களின் நிலைப்பாட்டை அவர் வெகுவாக பாராட்டினார்.
சல்மான் கான்
Published on

வினாத்தாள் கசிவு விவகாரத்தை ஒரு தீவிரமான பிரச்சனையாக குறிப்பிட்ட நடிகர் சல்மான் கான், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், அமைதியான முறையில் போராடியபோது பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

தங்கள் எதிர்காலத்திற்காகவும், சிறந்த மற்றும் கல்வியறிவு மிக்க இந்தியாவை உருவாக்குவதற்காகவும் கடினமாகப் படிப்பதில் அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்திய மாணவர்களின் நிலைப்பாட்டை அவர் வெகுவாக பாராட்டினார்.

எக்ஸ் தள பதிவு:

"இது மிகவும் அமைதியான ஒரு போராட்டமாக இருந்தது; இது வன்முறையாக மாறியது மிகவும் வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் நான் வருந்துகிறேன். வினாத்தாள் கசிவு என்பது மிக தீவிரமான ஒரு பிரச்சனை. சிறந்த கல்வி முறைக்காக நம் நாட்டு மாணவர்கள் ஒன்றிணைந்திருப்பதையும், அவர்களின் பெற்றோர் அவர்களுக்கு ஆதரவளித்திருப்பதையும் காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த போராட்டம் சரியான அணுகுமுறை; மாணவர்கள் இதை அமைதியான முறையில் முன்னெடுத்துள்ளனர். இது மிகவும் துணிச்சலான மற்றும் வீரமிக்க செயல். கல்வியின் மீது மிகுந்த ஆர்வமும் உந்துதலும் கொண்ட இந்த தலைமுறை இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும்.

இந்தப் பிரச்சனை மாணவர்களுக்கும் கல்வி முறைக்கும் இடையிலான ஒன்று; இது அரசியல் ரீதியாக திசைதிருப்பப்படக் கூடாது. இதற்கான முழுப் பெருமையும் நம் நாட்டு மாணவர்களையே சாரும். அரசாங்கமும் அவர்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் அளித்து, வலுவான கல்வி முறையை உருவாக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் ஒரு சூழலாகும். ஒரு சாதகமான முடிவை எதிர்பார்த்து பிரார்த்திக்கிறேன்," என்று நடிகர் சலமான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபலங்கள் ஆதரவு:

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டங்களுக்கு, நசீருதீன் ஷா, ரத்னா பதக் ஷா, ஷபனா ஆஸ்மி, பிரகாஷ் ராஜ், ராஜ்குமார் ராவ், ரேவதி, டொவினோ தாமஸ் மற்றும் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட திரைப்பட துறையை சேர்ந்த பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், 'கான்' நட்சத்திரங்கள் மூவரில் (ஷாருக் கான், சல்மான் கான், அமீர் கான்) இந்த விவகாரம் குறித்துப் பேசிய முதல் நபர் சல்மான் கான் ஆவார்.

பல்வேறு தேர்வுகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' நடத்திய 'சலோ சன்சத்' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தின்போது, ​​தலைநகரில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்த இரண்டு நாட்களுக்கு பிறகு இவரது இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com