search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கலைஞரை பார்க்க தயங்கி குளிர் ஜுரம் என்று சொன்னேன்: ரஜினிகாந்த்
    X

    கலைஞரை பார்க்க தயங்கி குளிர் ஜுரம் என்று சொன்னேன்: ரஜினிகாந்த்

    • கலைஞர் சினிமாவிலேயே இருந்திருந்தால், இன்னும் பல எம்.ஜி.ஆர்.களையும் சிவாஜிகளையும் உருவாக்கி இருப்பார்.
    • பிரசார காலங்களில் மு.க.ஸ்டாலினின் பேச்சை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ரசித்த ரசிகர்களில் நானும் ஒருவன்.

    சென்னையில் நடந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியதாவது:-

    கலைஞர் சினிமாவிலேயே இருந்திருந்தால், இன்னும் பல எம்.ஜி.ஆர்.களையும் சிவாஜிகளையும் உருவாக்கி இருப்பார். ஆனால் சினிமா உலகம் கொடுத்து வைக்கவில்லை. அவரை அரசியல் எடுத்துக்கொண்டது. எழுத்து, பேச்சில் வித்தகராக திகழ்ந்தவர் கலைஞர். எழுத்து இல்லையென்றால் மதம், புராணம், வரலாறு, விஞ்ஞானம், வர்த்தகம், கதை, கவிதை, அரசு என எதுவும் இல்லை. இயற்கை கொடுத்த சக்தி எழுத்து. அவரது வசனத்தில் நான் நடிக்கவே பயந்த காலம் உண்டு.

    மு.க.ஸ்டாலினை 1974-ல் இருந்து எனக்கு தெரியும். பிரசார காலங்களில் மு.க.ஸ்டாலினின் பேச்சை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ரசித்த ரசிகர்களில் நானும் ஒருவன். எம்.ஜி.ஆர்., சிவாஜியை தனது எழுத்தால் உச்ச நடிகர்களாக்கினார். மந்திரிகுமாரி, மலைக்கள்ளன் படங்கள் மூலமாக கிடைத்த வருமானத்தை கொண்டு சென்னை கோபாலபுரத்தில் வீடு வாங்கினார். அந்த வீட்டில் தான் இறுதிகாலம் வரை எளிமையாக வாழ்ந்தார். அவரை போல மு.க.ஸ்டாலினும் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்.

    தன்னை விமர்சனம் செய்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மருத்துவ உதவிக்கு பணம் கொடுத்து உதவி செய்தவர் கலைஞர். தன்னை மிக மோசமாக விமர்சனம் செய்த பத்திரிகையாளரை நலம் விசாரித்தே, தலை வணங்கச் செய்தவர் கலைஞர். அந்த பத்திரிகையாளர் பெயர் சோ ராமசாமி, பொதுக்கூட்டத்தில் அவரை விமர்சனம் செய்த கட்சிக்காரரை கண்டித்து அடக்கியவர் எம்.ஜி.ஆர். கடவுள் நம்பிக்கைக்காரரான ஆன்மீகவாதி சத்ய சாய்பாபா, கலைஞரை வீடு தேடி சென்று சந்தித்து பேசினார்.

    எல்லாவற்றையும் விட தேர்தலின்போது இரட்டை இலைக்கு ஒரு முன்னணி நடிகர் ஓட்டு போட்டார். ஆனால் அவர் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டது தெரிந்தும் அவரது புதிய படத்தை பார்க்க கலைஞர் அவருக்கு அழைப்பு விடுத்தார். குளிர் ஜுரம் என்று சொல்லியும் அந்த நடிகரை கட்டாயமாக அழைத்து படத்தைப் பார்த்தார். அந்த நடிகர் நான்தான். சூரியன் பக்கத்தில் அமர்ந்தால் குளிர் ஜுரம் போய்விடும் என்று நகைச்சுவையாக அவர் அன்று பேசியதை என்னால் மறக்கவே முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது எனது பாக்கியம் என்று பேசினார்.

    Next Story
    ×