

‘கனவே கலையாதே', ‘மகிழ்ச்சி', ‘படையாண்ட மாவீரா' படங்களின் இயக்குனரும், நடிகருமானவர் வ.கவுதமன். இவர் சின்னத்திரையில் இயக்கிய 'சந்தனக்காடு', 'ஆட்டோ சங்கர்' தொடர்களும் கவனம் ஈர்த்தன.
இயக்குனர் கவுதமன் - மல்லிகா தம்பதியின் மகள் பரஞ்சோதிக்கும், க.குணாநிதி என்பவருக்கும் வருகிற 25-ந்தேதி புதுச்சேரி பட்டானூரில் உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெறுகிறது. முன்னதாக 24-ந்தேதி திருமண வரவேற்பும் நடைபெறுகிறது.
இதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் திருமண அழைப்பிதழ் அனைவரையுமே கவர்ந்துள்ளது. இதில் அவரது உறவினர்கள் அனைவரது பெயர்களும் ஒருவர் விடாமல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கவுதமனின் பாட்டன், பூட்டன் காலம் முதல் இப்போதைய அவரது மகள் வரை ஆறு தலைமுறையினரின் பெயர்களை, புகைப்படங்களுடன் 'தலைமுறை வரைபடம்' என்ற பெயரில் அச்சிட்டுள்ளார்.
நவீன யுகத்தில் மணமக்களின் பெயர்களை மட்டுமே தாங்கி பல வடிவங்களில் திருமண பத்திரிகைகள் வெளிவரும் சூழலில், தனது முன்னோர்களின் நினைவுகளை தாங்கி கவுதமன் தயாரித்துள்ள இந்த அழைப்பிதழ் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.