17 வயதில் எடுத்த குருட்டுதனமான முடிவு- அமலாபால்

பட புரமோஷனுக்கு கூட என்னை அழைக்கவில்லை. பயத்தால் சென்னைக்கு என்னால் போக முடியவில்லை.
17 வயதில் எடுத்த குருட்டுதனமான முடிவு- அமலாபால்
Published on

'சிந்து சமவெளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமலாபால். தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார்.

ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபாலுக்கு 'இலை' என்ற ஆண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கை பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

'சிந்து சமவெளி' படம் வெளியான சமயத்தில் எழுந்த விமர்சனங்கள் என்னை பயமுறுத்தியது. முக்கியமாக அந்த படம் பார்த்த என் அப்பா அதிகமாக வருத்தப்பட்டார். எனது கதாபாத்திரம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறினார்.

நாம் இதுபோன்ற கதாபாத்திரங்கள் செய்யக்கூடாது என்பதை அந்த படம் வெளியான பிறகுதான் புரிந்து கொண்டேன். அப்போது கேவலம் எனக்கு 17 வயது மட்டும் தான். இளம் நடிகை என்பதால் இயக்குனர் சொன்னதை கேட்டு குருட்டுத்தனமாக சம்மதித்து நடித்தேன்.

இதனால் நான் வேதனைக்கு உள்ளாகியது மட்டுமின்றி, எனது சினிமா வாழ்க்கை கூட பாதிக்கப்பட்டது. அதன் பிறகு நான் நடித்த 'மைனா' பட புரமோஷனுக்கு கூட என்னை அழைக்கவில்லை.

அதன் பிறகு எனக்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற மாபெரும் நடிகர்கள் கூட போன் செய்தார்கள். விபரீதமான எதிர்ப்பு காரணமாக எனக்கு ஏற்பட்ட பயத்தால் சென்னைக்கு என்னால் போக முடியவில்லை.

நான் அதன்பிறகு சினிமாவில் வெற்றி பெற்று சாதித்தேன். ஆனால் அந்த விவாதத்துக்குரிய படம் மீண்டும் ரீலீஸ் ஆனது. அப்பொழுது கூட புரமோஷனல் மெட்டீரியல் தவறான வழியில் சென்று விவாதத்தை ஏற்படுத்தியது.

இவற்றுக்கெல்லாம் பின்னணி சினிமா கேவலம் வியாபாரத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொண்டேன்.

இதை கருத்தில் கொண்டு ஒரு நடிகை எவ்வளவு பலமான அடி விழுந்தாலும் தாங்கிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதை எனக்கு புரிய வைத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com