தாதா தந்தையின் இடத்தை பிடிக்க நினைக்கும் மூன்று மகன்கள் - செக்கச் சிவந்த வானம் விமர்சனம்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய், விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ், டயானா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் விமர்சனம். #CCV
தாதா தந்தையின் இடத்தை பிடிக்க நினைக்கும் மூன்று மகன்கள் - செக்கச் சிவந்த வானம் விமர்சனம்
Published on

சென்னையை கலக்கும் மிகப்பெரிய தாதா பிரகாஷ் ராஜ். இவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் அரவிந்த் சாமி, பிரகாஷுடன் இருக்கிறார். இரண்டாவது மகன் அருண் விஜய் துபாயில் தொழில் செய்து வருகிறார். மூன்றாவது மகன் சிம்புவும் வெளிநாட்டில் இருக்கிறார்.

பிரகாஷ் ராஜ்க்கும், மற்றொரு தாதாவான தியாகராஜனுக்கும் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பிரகாஷ் ராஜ் காரில் செல்லும் போது, வெடிகுண்டு விபத்தில் சிக்குகிறார். இதில் உயிர் பிழைத்து தீவிர சிகிச்சை பிரிவில் பிரகாஷ் அனுமதிக்கப்படுகிறார்.

இதையறிந்த அருண் விஜய்யும், சிம்புவும் வெளிநாட்டில் இருந்து வருகிறார்கள். மகன்கள் மூன்று பேரும், அப்பாவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று விசாரிக்கிறார்கள். சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பும் பிரகாஷ் ராஜ், நெஞ்சுவலியால் உயிரிழக்கிறார். 

அதன்பிறகு அவருடைய இடத்திற்கு யார் வருவது? என்று மகன்கள் மூன்று பேருக்கும் சண்டை ஏற்படுகிறது. இந்த பதவிச் சண்டையில் வெற்றி பெற்றது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் மூத்த மகனாக நடித்திருக்கும் அரவிந்த் சாமி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தந்தையுடனே பயணிக்கும் இவர், நான் தான் அடுத்த தாதாவிற்கு தகுதியானவன் என்று கம்பீரத்துடன் நடித்திருக்கிறார். இரண்டாவது மகனான அருண் விஜய், துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மூன்றாவது மகன் சிம்பு, இளமை துள்ளலுடன் நடித்து அசத்தியிருக்கிறார். அரவிந்த் சாமியின் நண்பராகவும், போலீஸ் அதிகாரியாகவும் மிரட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. எல்லாவற்றிற்கும் மேலாக தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். 

அரவிந்த்சாமியின் மனைவியாக வரும் ஜோதிகா, ரிப்போர்ட்டராக வரும் அதிதிராவ், அருண் விஜய்யின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்புவின் காதலியாக வரும் டயானா எரப்பா ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 

தாதாவான தந்தை இறந்த பிறகு, அந்த இடத்தை பிடிக்க நினைக்கும் மூன்று மகன்களின் போட்டா போட்டியை மையமாக வைத்து, தன்னுடைய பாணியில் திரைக்கதை அமைத்து சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். வழக்கமான கதை என்றாலும், அதை ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப வழங்கியிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக கையாண்டு,  கச்சிதமாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு பவர்புல்லான கேங்ஸ்டர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது திரையில் பார்க்கும் போது மிகவும் புத்துணர்ச்சியோடு இருக்கிறது. பின்னணி இசையை வேற லெவலில் கொடுத்திருக்கிறார். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ செம வெயிட்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com