தன்னை விரும்பிய பெண்ணுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவன் - பில்லா பாண்டி விமர்சனம்

ஆர்.கே.சுரேஷ், சாந்தினி, இந்துஜா நடிப்பில் ராஜ்சேதுபதி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பில்லா பாண்டி’ விமர்சனம். #BillaPandi #BillaPandiReview
தன்னை விரும்பிய பெண்ணுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவன் - பில்லா பாண்டி விமர்சனம்
Published on

மதுரையில் தீவிரமான, வெறித்தனமான, பக்தியான அஜித் ரசிகராக இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். பில்லா படம் ரிலீசுக்கு பிறகு தனது பெயரை பில்லா பாண்டி என மாற்றிக் கொள்கிறார். அஜித்தை போற்றிப் பாடும் இவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.

இவரது முறைப்பெண் சாந்தினி தமிழரசன். ஆர்.கே.சுரேஷும், சாந்தினியும் ஒருவர் மேல் ஒருவர் பிரியமாக இருக்கிறார்கள். கட்டிட தொழிலில் வரும் பணத்தையெல்லாம் ரசிகர் மன்றத்தின் மூலம் உதவி செய்வது வருவதால் சாந்தினியை, ஆர்.கே.சுரேஷ்க்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார் மாரிமுத்து.

ஆர்.கே.சுரேஷ் காண்ட்ராக்ட் எடுத்து கட்டும் வீட்டுக்கு சொந்தக்காரரான இந்துஜாவுக்கு சுரேஷ் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் ஆர்.கே.சுரேஷோ இந்துஜாவை கண்டுகொள்ளாமல், சாந்தினியையே காதலிக்கிறார்.

இந்த நிலையில், இந்துஜாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க, அனைவர் முன்பும் இந்துஜா, தான் ஆர்.கே.சுரேஷை காதலிப்பதாக கூறுகிறார். இதற்கிடையே ஒரு விபத்தில் இந்துஜாவின் வீட்டார் அனைவரும் இறந்துவிடுகிறார்கள். இந்துஜா மனநிலை பாதிக்கப்படுகிறார்.

தனது குடும்பத்தை இழந்த இந்துஜாவை தனது பொறுப்பில் கவனிக்க ஆரம்பிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இதனால் இவருக்கும், சாந்தினிக்கும் இடையே பிரிவு வருகிறது.

கடைசியில், ஆர்.கே.சுரேஷ் காதல் என்ன ஆனது? இருவரில் யாரை கரம்பிடித்தார்? இந்துஜா பழைய நிலைமைக்கு திரும்பினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

வில்லன் வேடங்களில் பார்த்த ஆர்.கே.சுரேஷ் பில்லா பாண்டி மூலம் கதாநாயகனாக மாறி இருக்கிறார். தனக்கேற்ற ஒரு கதாபாத்திரத்தையும், கதையையும் தேர்வு செய்திருக்கிறார். முதல் பாதியில் கலகலக்கவும் இரண்டாம் பாதியில் கலங்கவும் வைக்கிறார். நடிப்பில் பக்குவம் தெரிகிறது.

வழக்கமான கதாநாயகியாக அறிமுகமாகும் இந்துஜா விபத்துக்கு பின் குழந்தையாகவே மாறி நம்மை உருக வைக்கிறார். சாந்தினி தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளார். தம்பி ராமய்யா, அமுதவாணன் இருவரும் சிரிக்க வைக்கிறார்கள்.

மதுரைப்பகுதியை பின்புலமாக கொண்டு நகைச்சுவை, காதல், குடும்ப செண்டிமெண்ட், ஆக்‌‌ஷன் எல்லாம் கலந்த ஒரு படத்தை ராஜ்சேதுபதி இயக்கி இருக்கிறார். எம்.எம்.எஸ்.மூர்த்தியின் எழுத்தில் மதுரை மண்மணம் இருக்கிறது.

இளையவனின் இசையும் ஜீவனின் ஒளிப்பதிவும் படத்தை ரசிக்க வைக்கின்றன.

மொத்தத்தில் `பில்லா பாண்டி' பார்க்கலாம் சீண்டி. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com