தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா பிக்பாஸ் பிரபலம்?

பெங்களூருவில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் லோகோ
பிக்பாஸ் லோகோ
Published on

கன்னடத்தில் வளம்வரும் இளம் நடிகையாக அறியப்படுபவர் ஜெயஸ்ரீ ராமையா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு கன்னட பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். கன்னட கொத்திலா, உப்பு குலி காரா ஆகிய படங்களிலும் ஜெயஸ்ரீ ராமையா நடித்து இருந்தார்.

இந்த நிலையில் ஜெயஸ்ரீ ராமையா தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் நான் மனசோர்வாக உள்ளேன். இந்த உலகத்தில் இருந்து விடைபெறுகிறேன் என்று கூறியிருந்தார். இந்த பதிவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பதிவை பார்த்த ஜெயஸ்ரீ ராமையாவின் நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் அவர் செல்போன் அழைப்பை எடுத்து பேசவில்லை.

இந்த நிலையில் ஜெயஸ்ரீ ராமையா தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அவரது தோழியும், நடிகையுமான அஸ்வதி ஷெட்டி முற்றிலுமாக மறுத்தார். 

இந்த நிலையில் நேற்று மாலை ஜெயஸ்ரீ ராமையா தனது முகநூல் பக்கத்தில் இன்னொரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் நான் பாதுகாப்பாகவும், நலமாகவும் உள்ளேன். அனைவரையும் நேசிக்கிறேன் என்று கூறி இருந்தார். மேலும் அவர் முந்தைய பதிவையும் அழித்து இருந்தார். ஜெயஸ்ரீ ராமையா கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் புதிதாக ஒரு வீட்டை வாங்கி இருந்தார்.

இதுதொடர்பாக அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதனால் மனஅழுத்தத்தில் இருந்த ஜெயஸ்ரீ ராமையா தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கன்னட நடிகை தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com