கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா

கமல் அழகாக இருந்ததால் தான். அவரை சப்பாணி கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ததாகவும், அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போது தான் மக்களுக்கு பிடிக்கிறது என்றும் படவிழாவில் பாரதிராஜா பேசினார். #Maragathakkaadu
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
Published on

ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மரகதக்காடு’. முழுக்க  முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மங்களேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜெய்பிரகாஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்சியில் இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது, 

" இந்த விழாவில் பேசலாமா, வேண்டாமா என ஒரு தயக்கத்தோடுதான் வந்தேன். ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம். பல ஆண்டுகளுக்குப்பின் மூத்த தயாரிப்பாளர்களை இந்த மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.

கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்ச நாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு. இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர். இந்தப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார்.

இந்தப்படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்த்தபோது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரை சப்பாணி கேரக்டருக்கு தேர்வு செய்தேன். அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போது தான் மக்களுக்கு அது பிடிக்கிறது. இதே நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணியாக நடிக்கவைக்க முடிவு செய்திருந்தேன். படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வு செய்தேன். அப்படி சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள கூடாது. 

மூன்று நாட்கள் நம்மை வீட்டுக்குள் அடைத்துவைத்தாலே நம்மால் உட்கார முடியாது. கடந்த 27 வருடமாக சிறை எனும் நான்கு சுவருக்குள் அடைபட்டுக்கிடக்கும் அந்த ஏழு பேரும் மீண்டும் சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும். அதற்கு தமிழக அரசு பரிந்துரைக்க முடிவெடுப்பதோடு நின்று விடாமல் அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்கள் இனி உள்ள காலத்திலாவது நிம்மதியாக வாழட்டும்" என்றார்.

விழாவின் முடிவில் `மரகதக்காடு' படத்தின் இசைத்தகட்டை பாரதிராஜா வெளியிட்டார். #Maragathakkaadu #BharathiRaja

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com