

கடந்த ஆண்டு இந்திய திரை உலகில் சாதனை படைத்த படம் ‘பாகுபலி-2’. தெலுங்கில் தயாரான இது தமிழ், இந்தி உள்பட பல மொழிகளில் நாடு முழுவதும் ரிலீஸ் ஆனது. உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற இது வசூல் சாதனையும் படைத்தது.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணன், சமந்தா உள்பட இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவருக்கும் ரசிகர்களிடம் தனி மரியாதை கிடைத்தது. ராஜமவுலி பிரமாண்ட படங்களின் இயக்குனராக உயர்ந்தார். பாகிஸ்தான் படவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.
ரூ.1700 கோடி வரை வசூல் குவித்த ‘பாகுபலி-2’ ஜப்பானிலும் திரையிடப்பட்டது. இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந் தேதி அங்கு வெளியானது. ஜப்பான் மக்களிடமும் வரவேற்பை பெற்ற ‘பாகுபலி-2’ கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் அங்கு 100-வது நாளை கடந்து இருக்கிறது.
அங்கு இந்த படம் 13 மில்லியன் டாலர் வசூலித்து இருக்கிறது. பெரும்பாலான ஜப்பான்காரர்கள் ‘பாகுபலி-2’ ரசிகர்களாக மாறி இருப்பதாக கூறப்படுகிறது. #Baahubali2