அசுரவதம்

மருதுபாண்டியன் இயக்கத்தில் சசிகுமார் - நந்திதா ஸ்வேதா நடிப்பில் வெளியாகி இருக்கும் `அசுரவதம்' படத்தின் விமர்சனம்.
அசுரவதம்
Published on

மளிகைக் கடை வைத்திருக்கும் வசுமித்ராவிற்கு நாயகன் சசிகுமார் போன் செய்து ஒரு வாரத்தில் சாக போகிறாய் என்று மிரட்டுகிறார். யார் என்று தெரியாத ஒருவர் போன் செய்து மிரட்டுவதால் வசுமித்ரா பதட்டமடைகிறார். மறுநாள் கடை வாசலில் நிற்கும் சசிகுமார், வசுமித்ராவை முறைத்து பார்க்க, இவன் தான் தன்னை மிரட்டியது என்று தெரிந்துக் கொள்கிறார்.

பின்னர் இவர்களுக்குள் நடக்கும் சண்டையில், வசுமித்ராவை நடுரோட்டில் கொல்ல முயற்சிக்கிறார். ஆனால், வசுமித்ரா தப்பித்து விடுகிறார். பின்னர் பல முறை அவரை கொலை செய்ய முயற்சித்து வேண்டுமென்றே விட்டு அவருக்கு மரண பயத்தை காண்பிக்கிறார் சசிகுமார்.

பின்னர் தன் நண்பர்கள் மூலமாக சசிகுமாரை பிடிக்க முயற்சிக்கிறார் வசுமித்ரா. சிக்காமல் இருக்கும் சசிகுமார், ஒருகட்டத்தில் வசுமித்ராவிடம் சிக்கிக் கொள்கிறார். 

இறுதியில் வசுமித்ராவிடம் சிக்கிக் கொண்ட சசிகுமார், உயிர் தப்பினாரா? எதற்காக வசுமித்ராவிற்கு மரண பயத்தை காண்பிக்கிறார்? அவரது வாழ்க்கையில் நடந்தது என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார் வழக்கமான நடிப்புடன், அவருக்கே உரிய பாணியில் ஆக்‌ஷனை வெளிப்படுத்தி இருக்கிறார். சில காட்சிகளில் முந்தைய படங்களின் சாயல் தெரிகிறது. நாயகியாக நடித்திருக்கும் நந்திதாவிற்கு சின்ன வேலைதான். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

வில்லனாக வரும் வசுமித்ரா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சசிகுமாருக்கு பயந்து ஓடும் காட்சியில் பரிதாபப்பட வைக்கிறார். அவைகா, ஸ்ரீஜித் ரவி ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

சமூக அக்கறைக் கொண்டு ஒரு கருத்தை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் மருது பாண்டியன். ஆனால், கருத்தை ஏற்றுக் கொண்டாலும், திரைக்கதையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தில் மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா என்ற வசனம் வரும். அதையே இப்படத்தில் வில்லனுக்கு சசிகுமார் மரண பயத்தை காண்பிப்பதை மட்டுமே முழு திரைக்கதையாக வைத்திருக்கிறார். சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்த இயக்குனர், அவர்களை சரியாக உபயோகிக்க வில்லையோ என்று தோன்றுகிறது.

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. கோவிந்த் மேனனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘அசுரவதம்’ மிரட்டல். #Asuravadham #Sasikumar

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com