நான் இயக்கியிருக்கும் முதல் காதல் படம் ‘சொல்லிவிடவா’ - அர்ஜுன்

வேலை வி‌ஷயமாக இருவரும் போர்க்களத்துக்கு செல்லும் நாயகனுக்கும், நாயகிக்கும் இடையே ஏற்படும் காதல் கதை தான் ‘சொல்லிவிடவா’ படத்தின் கதை என்று நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
நான் இயக்கியிருக்கும் முதல் காதல் படம் ‘சொல்லிவிடவா’ - அர்ஜுன்
Published on

அர்ஜுன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘சொல்லிவிடவா’. இதில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுடன் புதுமுகம் சந்தன்குமார் நாயகனாக நடித்துள்ளார்.

“இது நான் இயக்கும் 14-வது படம். ‘பாண்டியநாடு’ படத்துக்கு பிறகு என் மகள் ஐஸ்வர்யாவுக்கு இது 2-வது படம். இதுவரை ஆக்‌ஷன் கதைகளை இயக்கி, நடித்து வந்தேன். முதன் முறையாக இதை காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறேன். என்றாலும், தேசபக்தி வி‌ஷயங்களும் இணைந்திருக்கிறது.

என் மகளுக்காகவே இந்த கதையை யோசித்து எழுதினேன். கார்கில் போர் பின்னணியில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நாயகனும், நாயகியும், வெவ்வேறு டி.வி.க்களில் வேலை செய்கிறார்கள். வேலை வி‌ஷயமாக இருவரும் போர்க்களத்துக்கு செல்கிறார்கள். அப்போது ராணுவ சேவை, ராணுவ வீரர்களின் தியாகம் இருவரையும் பாதிக்கிறது. இருவரும் காதலிக்கிறார்கள். பின்னர் என்ன நடக்கிறது எனது கதையின் கரு.

நானும் இதில் ஆஞ்சநேயர் பக்தராக கவுரவ வேடத்தில் நடிக்கிறேன். ‘சொல்லிவிடவா’ நான் நடிக்கும் 152-வது படம். இந்த படத்தை பார்ப்பவர்கள் ராணுவம் பற்றி பெருமையாக பேசுவார்கள். ஒரு ‘கட்’ கூட இல்லாமல் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

என் மகள் ஐஸ்வர்யா சிறப்பாக நடித்து இருக்கிறார். மகள் என்பதால் எந்த சலுகையும் கொடுக்கவில்லை. பாத்திரத்துக்கு ஏற்ப பயிற்சி எடுத்தார். போர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சிரமப்பட்டு எடுத்தோம்” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com