ஆண்டனி

லால், ரேகா, நிஷாந்த், விஷாலி நடிப்பில் குட்டி குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ஆண்டனி’ படத்தின் விமர்சனம். #Antony #AntonyReview
ஆண்டனி
Published on

கொடைக்கானலில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் லால், தனது மனைவி ரேகாவிற்கு நடக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால், அவருக்கு துணையாக இருக்க போலீஸ் பணியை விட்டு அவருடன் இருந்து வருகிறார். இவர்களின் ஒரே மகன் நிஷாந்த். இவருக்கு போலீஸில் வேலை கிடைக்கிறது.

நிஷாந்த் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் நாயகி விஷாலியை காதலித்து வருகிறார். இந்த காதல் விஷயம் அம்மா ரேகாவிற்கு பிடிக்கவில்லை. ஆனால், இவர்கள் காதலுக்கு அப்பா லால் துணையாக நிற்கிறார்.

இதனால், லால் துணையுடன் நிஷாந்தும் விஷாலியும் ரேகாவிற்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். அதன்படி காலையில், விஷாலியும், அப்பா லாலுவும் பதிவு திருமண அலுவலகத்தில் காத்திருக்கிறார்கள். ஆனால், நிஷாந்த் சொன்ன நேரத்தில் வரவில்லை. நிஷாந்த் செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணுக்குள் புதைந்து உயிருடன் சிக்கிக் கொள்கிறார்.

நீண்ட நேரம் ஆகியும் நிஷாந்த் வராததால், அவருக்கு என்ன ஆனது என்று லால் தேட ஆரம்பிக்கிறார். நிஷாந்த் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனையா, யாராவது எதிரி இருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரித்து தேடி வருகிறார். 

இறுதியில், லால் தனது மகனை கண்டுபிடித்தாரா? மண்ணுக்குள் சிக்கி இருக்கும் நிஷாந்த் உயிருடன் வெளியில் வந்தாரா? நாயகியுடன் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நிஷாந்த், திறமையாக நடிக்க முயற்சித்திருக்கிறார். போலீசாக கம்பீரமாகவும், மண்ணுக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கும் இளைஞனாகவும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் விஷாலி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் லால், மகனுக்கு என்ன ஆனது? எப்படி கண்டுபிடிப்பது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகனை தேடுவதற்கு இவர் சிகரெட் பிடித்து இறந்து விடுவாரோ என்று திரையில் பார்க்கும் போது பயம் ஏற்படுகிறது. சிகரெட் பிடிப்பதை குறைத்திருக்கலாம். அம்மாவாக நடித்திருக்கும் ரேகா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கொடைக்கானலில் ஏற்படும் நிலச்சரிவை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் குட்டி குமார். நல்ல கதையை கையில் எடுத்தாலும் அதை படமாக்கிய விதம் சற்று சரிவை ஏற்படுத்தி இருக்கிறது. மண்ணுக்குள் போராடும் நாயகன் மீது பரிதாபம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக படத்தின் முக்கிய காட்சி எந்தவித உணர்வையும் ஏற்படுத்தாதது பலவீனமாக அமைந்திருக்கிறது. 

சிவாத்மிகா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ஒரளவிற்கு ரசிக்க முடிகிறது. பாலாஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் ‘ஆண்டனி’ சுமாரானவன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com