

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர்சிங் நடித்த ‘பத்மாவத்’ படம் பெரும் எதிர்ப்புகளுக்கிடையே வெளியானது. இந்த படம் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்து வருகிறது.
இதில் அலாவுதீன் கில்ஜியின் மனைவி மெகஹருன்னிசாவாக நடித்தவர் அதிதிராவ். படம் பற்றி அவர் அளித்த பேட்டி...
‘பத்மாவத்’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்துக்காக அனைவரும், ரத்தமும், வியர்வையும் சிந்தி கடினமாக உழைத்தார்கள் என்பது எனக்கு தெரியும். எல்லோருடைய பிரார்த்தனையும் சேர்ந்து தான் படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறது.
என் பாத்திரம் சஸ்பென்ஸ் ஆக இருக்கட்டும் என்று தான் இயக்குனர் என் புகைப்படத்தை போஸ்டரில் போடவில்லை. விளம்பர நிகழ்ச்சிகளிலும் என்னை கலந்து கொள்ள சொல்லவில்லை. இப்போது படத்துக்கு கிடைத்த வரவேற்பையும், என் கதாபாத்திரத்தை ரசிகர்கள் பாராட்டியதையும் பார்த்து அழுதுவிட்டேன். என் பாத்திரமும், நடிப்பும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
ரன்வீர்சிங் படப்பிடிப்பு அரங்கத்தில் இருக்கும் போது, அலாவுதீன் கில்ஜியாகவே மாறிவிடுவார். சில நேரங்களில் அவர் என்னைப் பார்த்தபோது நான் பயந்துவிட்டேன். ஆனால் என் கதாபாத்திரம் மிகவும் தைரியமானது. ரசிகர்களுக்கு நன்றி” என்றார்.