

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘மாரி-2’ சினிமா படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தில் தென்காசி, அம்பை பகுதியில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் தனுசுடன் நடிகர் ரோபோ சங்கரும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரோபோ சங்கர், விமலுடன் நடித்துள்ள மன்னர் வகையறா சினிமாவை பார்க்க விரும்பினார். இதற்காக அவர் தனது நண்பர்களுடன் நெல்லை டவுனில் உள்ள அருணகிரி தியேட்டருக்கு வந்தார். அவரை தியேட்டர் உரிமையாளர் பரமசிவன் வரவேற்றார். பின்னர் அங்குள்ள பால்கனியில் ரசிகர்களோடு அமர்ந்து சினிமாவை பார்த்து ரசித்தார்.
இடைவேளையின்போது ரோபோ சங்கர் கூறுகையில், “எனக்கு சொந்த ஊர் மதுரை, நான் தற்போது மாரி-2 சினிமாவில் தனுசுடன் நடித்து வருகிறேன். மன்னர் வகையறா 3 ஆண்டு சிரமங்களுக்கு பிறகு தற்போது வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் ஆக்ஷன், காமெடி, செண்டிமென்ட் கலந்த படமாக உள்ளது.
அனைவரும், குடும்பத்துடன் பார்க்கும் வகையில் படம் அமைந்துள்ளது. இந்த சினிமாவுக்கு நெல்லையில் ரசிகர்கள் வரவேற்பு நன்றாகவே உள்ளது” என்றார்.