

சென்னை ஐகோர்ட்டில், தியாகராய நகர், வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன் உள்ளிட்ட பலர் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கில் அவர்கள், “சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, அபிபுல்லா சாலையையும், பிரகாசம் சாலையையும் இணைக்கும் 33 அடி அகலம் கொண்ட பொது சாலையை நடிகர் சங்கத்தினர் மறித்துள்ளனர்.
இதனால், பொதுமக்கள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் குடியிருப்பவர்கள், பிரகாசம் சாலைக்கு வருவதற்கு வேறு பாதைகளை பயன்படுத்தி சுற்றி வரவேண்டியதுள்ளது. விதிமுறைகளை மீறி, சாலைகளை மறித்து கட்டிடம் கட்டப்படுவதால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறி உள்ளனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர், ‘இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சங்கம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த நிலையில் வழக்கு, இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.