ஆருத்ரா - சிறுமிகளை சீரழிக்கும் மனித மிருகங்களை அழிக்க கதாநாயகன் எடுக்கும் அவதாரம்

சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மையப்படுத்தி பா.விஜய் இயக்கி, நடித்திருக்கும் `ஆருத்ரா' படத்தின் விமர்சனம். #AaruthraReview #PaVijay
ஆருத்ரா - சிறுமிகளை சீரழிக்கும் மனித மிருகங்களை அழிக்க கதாநாயகன் எடுக்கும் அவதாரம்
Published on

ஞானசம்பந்தம், பா.விஜய் இணைந்து சிற்பம் உள்ளிட்ட கலைப்பொருட்களை செய்து விற்கும் கடை வைத்திருக்கிறார்கள். அத்துடன் சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 

இதற்கிடையே சமூகத்தில் சில பெரிய மனிதர்கள் கடத்தப்பட்டு வேறு மாநிலங்களில் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். மர்மமான முறையில் நடக்கும் இந்த கொலைகள் குறித்து விசாரிக்க தனியார் துப்பறியும் நிபுணரான பாக்யராஜ், காவல்துறையால் நியமிக்கப்படுகிறார். அவரது உதவியாளராக மொட்டை ராஜேந்திரன் வருகிறார். விசாரணையில் அவரது வீட்டு மாடியில் குடியிருக்கும் பா.விஜய் தான் குற்றவாளி என்பது தெரிய வருகிறது. அவரை கைது செய்து விசாரிக்கையில் அதற்கான காரணங்கள் தெரிய வருகிறது. 

அதன்படி பா.விஜய் ஏன் குற்றவாளி ஆனார்? சமூகத்தின் முக்கிய மனிதர்களை கொலை செய்வது ஏன்? அவர் குடும்பம் என்ன ஆனது? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை. 

சிறுமிகளை சீரழிக்கும் சில மனித மிருகங்களை அழிக்க கதாநாயகன் எடுக்கும் அவதாரமே ஆருத்ரா. பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கும் அவர்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குபவர்களுக்கும் தர வேண்டிய தண்டனை என்ன? என்பதை கூறியிருக்கிறார் இயக்குனர் பா.விஜய். பா.விஜய் படத்தை இயக்கியதோடு கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும் ஒட்டுமொத்த படத்தையும் தோளில் தாங்கி இருக்கிறார். நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. குடும்பத்தின் மீதும், தங்கை மீதும் பாசம் காட்டும்போதும், சிவாவாக வில்லன்களிடம் ஆவேசம் காட்டும்போதும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

ரொமான்ஸ் காட்சி இல்லாமல் திரைக்கதை அமைத்தது சாமர்த்தியத்தை காட்டுகிறது. இருப்பினும் திரைக்கதை, படத்தொகுப்பில்  கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். கதையை ஆங்காங்கே பாதியில் விட்டுச் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தக்‌ஷிதா, சஞ்சனா சிங், சோனி சரிஷ்டா என்று 3 கதாநாயகிகள் இருந்தாலும், யாருக்குமே பெரிய வேலை இல்லை. சிறுமிகளுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிரான கதையில் பெண்கள் முகம் சுளிக்கும் சில வசனங்களை தவிர்த்து இருக்கலாம். முதல் பாதி கிரைம் திரில்லராகவும் இரண்டாம் பாதி குடும்ப படமாகவும் இருக்கிறது. அழுத்தமான வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கின்றன.

தனியார் துப்பறியும் நிபுணராக பாக்கியராஜ் தனது பாணியில் கதையை கலகலப்பாக நகர்த்துவதோடு, முக்கிய திருப்பத்துக்கும் உதவுகிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், மீரா கிருஷ்ணன், ஞானசம்பந்தன் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

வித்யாசாகர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பி.எல்.சஞ்சய் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

மொத்தத்தில் `ஆருத்ரா' தேவையான தரிசனமே. #AaruthraReview #PaVijay

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com