

நாயகி தீபிகாவின் தந்தை கிராமத்தில் வெட்டியான் வேலை செய்கிறார். இவருக்கு இரண்டு பெண் ஒரு மகன். அம்மா இல்லாததால் நாயகி தீபிகா தன் தம்பியையும் தங்கையையும் தாயைப்போல பார்த்துக் கொள்கிறார். திருமணம் வயதாகியும் தனது தங்கை தம்பிக்காக திருமணம் செய்து கொள்ளாமல் இவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்பது உறுதியாக உள்ளார்.
ஒருகட்டத்தில் நாயகியின் தம்பி பெரியவனாகி தனது தந்தைக்கு உதவியாக வெட்டியான் வேலை செய்து தன் அக்காவை நல்லபடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று உறுதியுடன் செயல்பட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் மின்சாரம் தாக்கி தீபிகாவின் தம்பி இறந்துவிடுகிறான். மகனை காப்பாற்ற சென்ற தீபிகாவின் தந்தைக்கும் மின்சாரம் தாக்கி ஒரு கை செயலிழந்து போகிறது. அவர் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்.
இதனால் வேறு வழியின்றி தனது தங்கையின் உதவியுடன் வெட்டியாள் வேலையை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றுகிறார் நாயகி தீபிகா. இதனிடயே அப்பகுதியில் வசிக்கும் நாயகன் விஜயராஜ் நாயகியின் மீது காதல் கொள்கிறார். நாயகியையே சுற்றி வரும் நாயகன் சின்சியராக காதலித்து வருகிறார். இறுதியில் நாயகிக்கு அவர் மீது காதல் வந்ததா? தனது குடும்ப சூழ்நிலையை மீறி நாயகனுடன் இணைந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
சேலத்தில் வெட்டியாள் வேலை பார்க்கும் பெண்ணின் வாழ்க்கை தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையில் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார் தீபிகா. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சுடுகாட்டில் தான் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஹீரோவாக நடித்துள்ள விஜயராஜ் படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் நேர்த்தியாக நடித்துள்ளார்.
இதுவரை யாரும் தேர்ந்தெடுக்காத ஒரு கதையை தேர்ந்தெடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர். படத்தின் வசனங்கள் படத்திற்கு வலுவூட்டி இருக்கிறது. நாயகியின் தங்கை, தந்தை, தம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். கதையின் மூலக்கரு நன்றாக இருந்தாலும், அதை கொண்டு சென்ற விதத்தில் சற்று சறுகியிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ். மிக மெதுவாக நகரும் கதையால், கொஞ்சம் சலிப்பு ஏற்படுகிறது. வசனங்கள் படத்திற்கு வலுவூட்டி இருக்கிறது. கேமரா ஒர்க் மியூசிக் பரவாயில்லை.
மொத்தத்தில் ‘ஆறடி’ பெண்ணின் போராட்டம்.