பப்ஜி, ஃப்ரீபயரை தொடர்ந்து இந்த மொபைல் கேமுக்கும் தடை?- நீதிமன்றத்தில் வழக்கு

கடந்த மாதம் ஃப்ரீபயர் தடை செய்யப்பட்ட நிலையில் பப்ஜியை போலவே உள்ள பி.ஜி.எம்.ஐயும் தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பிஜிஎம்ஐ
பிஜிஎம்ஐ
Published on

இந்திய உட்பட உலகின் மிக பிரபலமான மொபைல் கேமாக பப்ஜி இருந்து வந்தது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய அரசு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பப்ஜி உள்ளிட்ட பல சீன செயலிகளுக்கு தடை விதித்தது. 

இதையடுத்து பப்ஜிக்கு மாற்றாக ஃப்ரீபயர் உள்ளிட்ட கேம்கள் விளையாடப்பட்டு வந்தன. இதில் பப்ஜியை போன்றே இருக்கும் பி.ஜி.எம்.ஐ என்ற மொபைல் கேமும் இந்தியாவில் அறிமுகமாகி பெரும் ஆதரவை பெற்றது. 

இந்நிலையில் கடந்த மாதம் சீனாவுடன் தொடர்பில் இருப்பதாக கூறி ஃப்ரீபயர் கேமிற்கும் மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து தற்போது பி.ஜி.எம்.ஐ கேமையும் தடைவிதிப்பதற்காக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில் பப்ஜி கேம் தான் பி.ஜி.எம்.ஐ என்ற பெயரில் தென் கொரியா தயாரிப்பாளர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அந்த கேமை தடை செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு, பப்ஜி விளையாட்டும், பி.ஜி.எம்.ஐ விளையாட்டும் வேறு வேறு என்பதை உறுதி செய்தபின் தான் அனுமதி அளிக்கப்பட்டது என விளக்கம் அளித்தது.

ஃப்ரீபயர் கேமும் சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தது. ஆனால் சீனாவுடன் தொடர்பில் இருப்பதாக அந்த கேம் தடை விதிக்கப்பட்டது. அதேபோன்று பி.ஜி.எம்.ஐயும் எந்நேரத்திலும் தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com