

டி20 உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பியுள்ள இந்திய வீரர்களுக்கு நேற்று மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வான்கடே மைதானத்தில் நடக்கும் பாராட்டு விழாவுக்கு செல்லும் வழியில் கடற்கரை ஓரமாக மரைன் டிரைவில் நடந்த வெற்றி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இந்திய அணி வீரர்களை உற்சாகப் படுத்தினர்.
இந்த ஊர்வலத்தில் இந்தியர்களின் நற்பண்பை எடுத்துக்காட்டும் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. அதாவது ஊர்வலத்தின்போது மரைன் டிரைவ் சாலை வழியாக நோயாளியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. உடனே அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், அனைவரும் ஒன்றுதிரண்டு விலகி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
லட்சக்கணக்கானோர் ஒரே சமயத்தில் விலகி வழி ஏற்படுத்தும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி அனைவரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. இதுதொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனரும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் இந்த செயலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.