தமிழ்நாடு

திருமங்கலம் அருகே 16-ம் நூற்றாண்டு நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

Published On 2023-03-06 07:31 GMT   |   Update On 2023-03-06 07:31 GMT
  • கரடிக்கல் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் சிற்பம் 3 அடி உயரம், 2 அடி அகலம், 12 செ.மீ. தடிமன் கொண்டது.
  • வீரனின் உருவத்தை பொறுத்தமட்டில் முகம் தேய்ந்த நிலையிலும், இடது கையில் கேடயம் ஏந்தியவாறும் உள்ளது.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் கரடிக்கல் பகுதியை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் சுந்தர் என்பவர், தங்கள் ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக கொடுத்த தகவலின்பேரில் மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர், பேராசிரியர் முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர்கள் லட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன், ஆய்வாளர் ஆனந்த குமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் கள ஆய்வு செய்தனர். அப்போது ஊரின் மேற்குப் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மண்ணில் பாதி புதைந்த நிலையில் கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் வீரன் சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து பேராசிரியர் முனீஸ்வரன் கூறியதாவது:

சங்க காலம் முதல் இன்றுவரை தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழிபாட்டு முறை ஒரு முக்கிய பங்காக கருதப்படுகிறது. நடுகல் என்பது போரில் இறந்த வீரர்களின் நினைவாக வைக்கப்படும் கல்லாகும்.

கரடிக்கல் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் சிற்பம் 3 அடி உயரம், 2 அடி அகலம், 12 செ.மீ. தடிமன் கொண்டது. இது தனி பலகை கருங்கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரனின் உருவத்தை பொறுத்தமட்டில் முகம் தேய்ந்த நிலையிலும், இடது கையில் கேடயம் ஏந்தியவாறும் உள்ளது.

வலது கையில் நீண்ட வாளை பிடித்தவாறு சிற்பம் உள்ளது. வலது புறம் சரிந்த கொண்டையை அள்ளி முடித்தும், காதுகளில் காதணி, கழுத்தில் சரபளி சவடி, பதக்கம் போன்ற ஆபரணங்களும், மார்பில் சன்னவீரம் எனப்படும் வீர சங்கிலியும் காணப்படுகிறது. சன்னவீரம் என்பது போருக்கு செல்லும் வீரர்கள் அணிவதாகும்.

வீரனின் இடுப்பு பகுதியில் சலங்கை மற்றும் பதக்கம் கொண்ட அணிகலன்களும் கை, கால்களில் வீரக்கழல் அணிந்து கொண்டும் முன்னங்காலை ஊன்றி போருக்கு செல்வது போன்ற நிலையில் காணப்படுகிறது.

வீரனின் வலதுபுறத்தில் பெண் சிற்பம் தேய்ந்த முகத்துடன் நீண்ட காதுகளில் அணிகலன் அணிந்து அலங்காரத்துடன் சரிந்த கொண்டையும் , உடல் முழுவதும் ஆடை அணிந்து வலது கை தொங்கவிட்டு, இடது கை வீரனை பின் தொடர்ந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிற்பத்தின் மேல் பகுதியில் நீண்ட வடிவில் பெரிய எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு தேய்ந்த நிலையில் உள்ளது. இந்தக் கல்வெட்டை மை படி எடுத்து ஆய்வு செய்தபோது எழுத்துக்கள் தேய்மானத்தோடு காணப்பட்டதால் ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சொ. சாந்தலிங்கம் உதவியுடன் படிக்கப்பட்டது. கல்வெட்டில் கடைசி வரி பெற்றான் என்ற வரி மட்டும் வாசிக்க முடிந்தது. மற்ற எழுத்துக்கள் தேய்மானம் கொண்டு இருப்பதால் பொருள் அறியமுடியவில்லை. கல்வெட்டின் எழுத்தமைதி பொறுத்து அதன் காலம் கி.பி 16-ம் நூற்றாண்டு என்று தெரியவந்துள்ளது.

இந்த பகுதியில் போர்க்களத்தில் திறம்பட போரிட்டு இறந்த போர் வீரனின் நினைவை பறைசாற்றுவதற்காக எழுப்பட்ட நடுகல்லாக இருக்கலாம் என்று தெரிகிறது. தற்போது இந்த நடுகல்லை மக்கள் வேட்டைக்காரன் சாமி என்று வழிபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News