search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தென்திருப்பேரை வரலாறு
    X

    தென்திருப்பேரை வரலாறு

    • ஸ்ரீபேரை என்ற பெயரில் பூமிப் பிராட்டி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயருண்டாயிற்று.
    • மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளார்.

    "நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்

    நாணெனக் கில்லை என் தோழிமீர்காள்

    சிகரமணி நெடுமாட நீடு

    தென் திருப்பேரையில் வீற்றிருந்த

    மகர நெடுங்குழைக் காதன் மாயன்

    நூற்றுவரை அன்று மங்க நூற்ற

    நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்

    நெஞ்சம் கவர்ந்து எனை யூழியானே (3368) திருவாய்மொழி

    என்று நம்மாழ்வாரின் பாடல் பெற்ற இத்திருத்தலம் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கு திசையில் உள்ளது.

    திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது. திருக்கோளூரிலிருந்து நடந்தும் வரலாம்.

    வரலாறு

    பிரமாண்ட புராணமே இதைப் பற்றியும் தெரிவிக்கிறது. ஒரு சமயம் ஸ்ரீமந் நாராயணன் திருமகளை விடுத்து பூமாதேவியிடம் அதிக ஈடுபாடு கொண்டு பூவுலகில் பூமாதேவியிடம் லயித்திருந்த காலையில் திருமகளாகிய இலக்குமி தன்னைக் காண வந்த துர்வாச முனிவரிடம், தனது தனித்த நிலைமையைத் தெரிவித்து பூமாதேவியின் நிறமும் அழகும் தனக்கு வரவேண்டுமென்று வேண்டினாள்.

    துர்வாசர் பூமிப்பிராட்டியின் இருப்பிடம் அடைந்தார். துர்வாசர் வந்திருப்பதை அறிந்தும் அறியாது போல் இருந்த பூமாதேவி, எம்பெருமானின் மடியைவிட்டு எழுந்திராமல் இருக்கவே, கடுஞ்சினங்கொண்ட துர்வாசர் பூமாதேவியை நோக்கி "நீ இலக்குமியின் உருவத்தை பெறுவாய்" என்று சபிக்க அதுகேட்ட பூமாதேவி தனது குற்றத்தை உணர்ந்து மிகவும் வருந்திய நிலையில், தனது குற்றத்தை பொறுக்குமாறு வேண்டிக்கொண்டு எனது "கரிய நிறம் பெறும் காலம்" எப்போது வருமென்று கேட்க, தாமிரபரணியின் தென் கரையில் உள்ள கரிபதம் என்ற சேத்திரத்தில் நதியில் நீராடி தவம் புரிந்தால் உனது பழைய உருவம் சித்திக்கும் என்று கூறியருளினார்.

    இதன் பிறகு துர்வாச முனிவர் இவ்விபரத்தை இலக்குமியிடம் சொல்ல இலக்குமியும் ஆனந்தித்திருந்தாள்.

    துர்வாசர் கூறியபடி பூமாதேவி ஸ்ரீபேரை (இலக்குமியின் உடல்) என்ற பெயருடன் அஷ்டாச்சர மந்திரத்தை ஜெபித்து ஒரு பங்குனி மாதம் பௌர்ணமியன்று நீராடி தர்ப்பணம் செய்ய முயற்சிக்கும்போது, அந்நதியில் மீன் வடிவமுள்ள இரண்டு குண்டலங்களைக் கண்டு அவைகளைக் கையிலெடுத்ததும் திருமால் பிரத்யட்சமாக அம்மகர குண்டலங்களைத் திருமாலுக்கே உகந்தளித்தாள். அதனால் எம்பெருமானுக்கும் "மகர நெடுங்குழைக் காதர்" என்ற திருநாமம் உண்டாயிற்று அத்தீர்த்தத்திற்கும் மத்ஸய தீர்த்தம் என்றே பெயருண்டானது. தேவர்கள் பூச்சொரிய அழகுத்திருமேனியாக விளங்கின திருமால் பூமாதேவியின் விருப்பப்படியே மகர நெடுங்குழைக் காதராகவே அங்கு எப்போதும் காட்சியளிக்கச் சம்மதித்தார்.

    ஸ்ரீபேரை (லக்குமியின் உடல்) என்ற பெயரில் பூமிப் பிராட்டி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயருண்டாயிற்று.

    108 வைணவதிவ்ய தேசங்களில் சோழநாட்டில் திருச்சிக்கு அண்மையில் திருப்பேர் நகர் என்ற திவ்ய தேசமொன்றிருப்பதால் இத்தலத்தை தென் திருப்பேரை என்று அழைத்தனர்.

    மூலவர்: மகர நெடுங்குழைக்காதன். நிகரில் முகில் வண்ணன். கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.

    தாயார்: குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியார்

    விமானம்: பத்ர விமானம்

    தீர்த்தம்: சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மத்ஸய (மகர) தீர்த்தம்

    சிறப்புக்கள்

    1. ஒரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும் யுத்தம் நடைபெற்றது. இந்திரனிடம் தோற்றுப்போன அசுரர்கள் மேற்கு திசை சென்று வருணனுடன் போரிட்டு வருணனைத் தோற்கடித்தனர். தனது பாசத்தை (வருணனின் ஒருவகையான ஆயுதம்) இழந்து, என்ன செய்வதென்றறியாது திகைத்து தனது குருவான வியாழபகவானைச் சரணடைய, வருணனை நோக்கிய வியாழ பகவான் நீ ஒரு காலத்தில் மதியீனத்தால் என்னை அவமதித்ததால் உனக்கு இக்கதி ஏற்பட்டது.

    இதிலிருந்து மீள்வதற்கு ஒரே உபாயம், எம்பெருமான் ஸ்ரீபேரை என்ற பூமிப்பிராட்டியுடன் மகரபூஷணர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள திருப்பேரை சென்று அப்பெருமானைக் குறித்துத் தவம் செய்வதொன்றே யாகுமென்றார்.

    அவ்வாறே வருணன் கடுந்தவம் மேற்கொள்ள எம்பெருமான் தோன்றி, தமது திருக்கரத்தால் தீர்த்தத்தை எடுத்துக் கீழேவிட அது பாசம் ஆயிற்று. வருணன் தனது பாசத்தையும், இழந்த நகரத்தையும் பெற்றான்.

    இன்றும் ஆண்டுதோறும் வருணன் இந்த திவ்ய தேசத்திற்கு வந்து பங்குனி மாதம் பௌர்ணமியன்று எம்பெருமானுக்கு ஆராதனம் செய்து வருவதாக ஐதீகம். இந்தக் கதை பிரம்மாண்ட புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது.

    2. ஒரு சமயம் விதர்ப்ப தேசத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டு பன்னிரன்டாண்டுகள் மழையின்றிப் போக அந்நாட்டரசன் இதற்கான காரணத்தை தனது புரோகிதரிடம் வினவ, இப்பஞ்சத்திற்கு காரணம் தேவதா கோபமேயன்றி, நீ காரணமல்ல என்று கூறிய அரண்மனைப் புரோகிதர், மழைக்கு அதிபதியான வருண பகவானின் சாபம் நீங்கப் பெற்ற தென்திருப்பேரை எம்பெருமானைச் சென்று வழிபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூற மன்னனும் அவ்விதமே வந்து வழிபட்டு சிறப்பான பூஜைகள் செய்ய திரண்டுவந்த முகில்களால் நீர்மாரி பெய்து விதர்ப்ப நாட்டில் பஞ்சம் ஒழிந்தது. இதனால் இப்பெருமானுக்கு நீர் முகில் வண்ணன் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. இக்கதையும் பிரம்மாண்ட புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது.

    3. வருணன் மழைக்கதிபதி. நவக்கிரகங்களில் சுக்கிரன் மழைக்குரிய கிரகம். வருண சாபந் தீர்ந்ததால் இப்பெருமானை உகந்து சுக்கிரனும் இங்கு வந்து தவம் செய்து திருமாலின் அருள் பெற்றான் எனவும் கூறுவர்.

    4. ஆழ்வார்களில் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் பாடப்பட்டுள்ளது.

    5. மிகச்சிறிய கிராமமாக இந்த ஊர் விளங்குகிறது. இக்கோவில் மிகவும் பெரியது. எந்நேரமும் போக்குவரத்து வசதியுள்ளது. நெடுஞ்சாலையருகே மிகவும் அழகுற அமைந்துள்ளது இக்கிராமம்.

    6. மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளார்.

    Next Story
    ×