search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளிர் உலககோப்பை கிரிக்கெட் அரைஇறுதி: இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா நாளை பலப்பரீட்சை
    X

    மகளிர் உலககோப்பை கிரிக்கெட் அரைஇறுதி: இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா நாளை பலப்பரீட்சை

    பெண்கள் உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதுகின்றன.
    பிரிஸ்டல்:

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 24-ந் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. இதில் 8 நாடுகள் பங்கேற்றன.

    இதன் ‘லீக்’ ஆட்டங்கள் நேற்று முன்தினம் முடிவடைந்தன.

    இதன் முடிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின.

    நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேற்றப்பட்டன. பாகிஸ்தான் மகளிர் அணி தான் மோதிய 7 ஆட்டங்களிலும் தோற்றது.

    2 நாள் ஓய்வுக்கு பிறகு முதல் அரை இறுதி ஆட்டம் நாளை (18-ந் தேதி) நடக்கிறது. இதில் முதல் இடத்தை பிடித்த இங்கிலாந்து- நான்காம் இடத்தை பிடித்த தென் ஆப்பரிக்கா அணிகள் மோதுகின்றன.

    3 முறை உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 7-வது முறையாக இறுதிப்போட்டியில் நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    அந்த அணி லீக் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடித்தது. பாகிஸ்தானை 107 ரன் வித்தியாசத்திலும், இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்திலும், தென் ஆப்பிரிக்காவை 68 ரன் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை 3 ரன்னிலும், நியூசிலாந்தை 75 ரன்னிலும், வெஸ்ட் இண்டீசை 92 ரன்னிலும் வென்று இருந்தது. இந்தியாவிடம் 35 ரன்னில் தோற்று இருந்தது.

    தென் ஆப்பிரிக்கா அணி ‘லீக்’ ஆட்டத்தில் தோற்றதற்கு பதிலடி கொடுத்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 4 ஆட்டங்களில் வென்று இருந்தது. 2 போட்டியில் தோற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

    2-வது அரை இறுதி ஆட்டம் வருகிற 20-ந்தேதி நடக்கிறது. இதில் இந்தியா- நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் மோதுகின்றன.
    Next Story
    ×