search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒக்கி புயலில் சிக்கி மரணம் அடைந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
    X

    ஒக்கி புயலில் சிக்கி மரணம் அடைந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

    ஒக்கி புயலில் சிக்கி மரணம் அடைந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    ஒக்கி புயலில் சிக்கி மரணம் அடைந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை கண்டறிய மேற்கொள்ளப்படும் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.



    அண்டை மாநிலங்களில் கரை சேர்ந்த தமிழ்நாடு மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசு செலவில் டீசல் மற்றும் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு நிதியுதவி வழங்கி, அவர்களது படகுகளுடன் அவரவர் சொந்த ஊர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசு உதவியுடன் கொண்டு வந்து சேர்க்கும் பணியினை மேற்கொள்ள ஏதுவாக, 5 மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை கர்நாடகா, மராட்டியம், குஜராத், கேரளா மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திற்கும் அனுப்ப முதல்-அமைச்சர் ஆணையிட்டதைத் தொடர்ந்து, மேற்கண்ட உயரதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சென்றடைந்து, அங்கு இருக்கும் தமிழ்நாடு மீனவர்களை பத்திரமாக சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    காணாமல் போன மீனவர்கள், கரை சேர்ந்த மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட படகுகள் குறித்த கணக்கெடுப்புப்பணி கிராம வாரியாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் காணாமல் போன மீனவர்கள் குறித்த விரிவான ஆய்வு மேற்கொண்டு இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் அலுவலர் குழு ஒன்று அமைக்கப்படும்.



    இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் காணாமல் போன மீனவர்களை இறந்தவர்களாகக் கருதி உரிய நிவாரணம் வழங்கப்படும். ஒக்கி புயலில் சிக்கி மரணமடைந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு உதவி ரூபாய் 2 லட்சம் உட்பட தலா ரூபாய் 10 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    ஒக்கி புயலில் சிக்கி ஊனமடைந்து, தொடர்ந்து மீன்பிடி தொழில் மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் மீனவர்களுக்கு மாற்று வாழ்வாதாரம் வழங்கிட ஏதுவாக மறுவாழ்வு நிதியுதவியாக ரூபாய் 5 லட்சமும், மருத்துவ நிவாரணமாக தலா 50,000 ரூபாய் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    ஒக்கி புயலினால் டிசம்பர் மாதம் மீன்பிடி தொழிலை செய்ய இயலாத நிலையைக் கருத்தில் கொண்டு, வாழ்வாதாரம் இழந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து மீனவர் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக தலா ரூபாய் 2,500 வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் காணாமல் போன மீனவ குடும்பங்களுக்கு சிறப்பினமாக, வாழ்வாதார உதவித்தொகை ரூபாய் 5,000 வழங்கவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    பிற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்கள் தமிழ்நாடு திரும்ப ஏற்கனவே எரி எண்ணெய் மற்றும் உணவுப்படி அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, மீனவர்களின் கோரிக்கையை ஏற்று டீசல் உதவி மற்றும் உணவுப்படி கீழ்க்கண்டவாறு உயர்த்தி வழங்கப்படுகிறது.

    அதன்படி, குஜராத், மராட்டியம் மற்றும் லட்சத்தீவு பகுதியில் இருந்து திரும்புவதற்கு விசைப்படகிற்கு ஆயிரம் லிட்டர் டீசலும், உணவுப்படி ஒரு நபருக்கு ரூ.2 ஆயிரமும், கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து திரும்ப விசைப்படகிற்கு 750 லிட்டரும், உணவுப்படி ஒரு நபருக்கு ரூ.2 ஆயிரமும் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் பதிவு செய்து, ஒக்கி புயலினால் பாதிப்பிற்குள்ளான மீனவர்களின் மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை புதுப்பிக்க தகுந்த மதிப்பீடு செய்த பிறகு, உரிய நிவாரணம் வழங்கப்படும். வருங்காலங்களில் அனைத்து படகுகளும் தவறாமல் பதிவு செய்வதுடன் ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் ஜி.பி.எஸ் மற்றும் தகுந்த தகவல் தொடர்பு கருவி பொருத்தப்பட வேண்டும்.

    ஒக்கி புயலினால் மரணமடைந்த மீனவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவியுடன் கல்வி நிறுவனங்கள் மூலம் திறன் வளர் பயிற்சிக்கு முன்னுரிமை வழங்கப்படும். உரிய காலத்தில் பாதிப்புகளை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் அதில் தேவைப்படின் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளவும் காணாமல் போன மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க சட்டப்பூர்வ தேவைகளில் நடைமுறைகளை தளர்வு செய்து உரிய அரசாணை பெறுவதற்கும் வருவாய் நிர்வாக ஆணையர் கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலர், வேளாண்மைத்துறை முதன்மைச் செயலர் மற்றும் வருவாய் துறை செயலர் ஆகியவர்கள் அடங்கிய குழுவை நியமித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    பத்திரமாக கரை சேர்ந்த மீனவர்களின் விவரங்களை அவர்களின் குடும்பங்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக, பத்திரிகைகள் மூலம் தெரியப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். கடலில் காணாமல் போன மீனவர்கள் அனைவரையும் தேடி கண்டுபிடித்து பத்திரமாக மீட்டு கரை சேர்க்கும் வரை, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×