search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆய்வுப்பணிகள் தொடர்ந்தால் கவர்னருக்கு எதிராக அறவழி ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின்
    X

    ஆய்வுப்பணிகள் தொடர்ந்தால் கவர்னருக்கு எதிராக அறவழி ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின்

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுப் பணிகளை தொடர்ந்தால் அவருக்கு எதிராக அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்திருப்பது, ‘ராஜ் பவன்’ மத்திய பா.ஜ.க. அரசின் அரசியல் நடவடிக்கைகளுக்கு தீவிரமாகவும் பரவலாகவும் பயன்படுத்தப்படுகிறதோ என்ற பலத்த சந்தேகத்தை எழுப்புவதோடு, “இது ஆய்வு அல்ல, வெளிப்படையான அரசியல்”, என்பதை உணர்த்துகிறது.

    “மாநில சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி” எனும் மாபெரும் முழக்கம் ஓங்கி ஒலிக்கும் தமிழ் மண்ணில், அதற்கு நேரெதிராக நடைபெறும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு, தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    “அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன்”, “வெளிப்படையான நிர்வாகத்திற்கு வித்திடுவேன்”, என்றெல்லாம் பல வாக்குறுதிகளை அளித்துப் பதவியேற்ற ஆளுநர், தற்போது மத்திய அரசின் திட்டங்களுக்குத் தூதுவராக செயல்பட்டு, பல மாவட்டங்களுக்குச் சென்று கொண்டிருப்பது ஆளுநரின் வரம்புகளை இன்னும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறதா அல்லது “எல்லை- வரம்புகள்” தெரிந்திருந்தும் மத்திய பா.ஜ.க. அரசின் கட்டளைப் படி தமிழகத்தில் பா.ஜ.க. விற்கு இதுவரை இல்லாத நற்பெயரை திரட்டி விட வேண்டும் என்று கருதுகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.


    மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமல்ல, மாநில அரசின் திட்டங்களும் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும் பொறுப்பையோ, அதிகாரத்தையோ நிச்சயமாக அரசியல் சட்டம் நியமன ஆளுநர்களுக்கு வழங்கிடவில்லை.

    அப்படியிருக்கும் சூழலில் இதுபோன்ற ஆய்வுகளில் ஆளுநர் தொடர்ந்து ஈடுபடுவது மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களில் ராஜ்பவன் மூலம் ஆக்கிரமித்து, தனியாதிக்கம் செலுத்தும் செயலாகும். அதுமட்டுமின்றி, இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதன் மூலம், பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஆளுநருக்கு நம்பிக்கை குறைந்துவிட்டதோ என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுந்து வருகிறது.

    முதுகெலும்பு இல்லாத முதல்-அமைச்சர் பதவியில் நீடிக்கும் காரணத்தினால், ஆளுநர் தன்னிடம் உள்ள, “மக்கள் நலன் காக்கும்” அந்த அதிகாரத்தை “ராஜ்பவனிலேயே” அமர வைத்து விட்டு, தலைமைச் செயலகத்தில் உள்ள மாநில அரசின் அதிகாரத்தை கையிலெடுத்துக் கொண்டு, இதுபோன்ற ஆய்வுகளில் மாவட்டந்தோறும் ஈடுபடுவது தமிழக மக்களின் மீதான அக்கறையால் அல்ல, இது முழுக்க முழுக்க சட்ட விரோத அரசியல் பணி.

    இந்த அரசியல் பணியை அவர் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசிற்காக திட்டமிட்டு செய்கிறார். இதுபோன்ற அரசியல் பணிகளுக்காக ஆளுநர் பதவி உருவாக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, “குமரி துயரத்தில்” இருந்து மீள முடியாமல் தவிக்கும் மக்களுக்கு அதிகாரிகள் மட்டத்தில் நடக்கும் ஏதோ ஒரு சில நிவாரண நடவடிக்கைகளையும் “ஆளுநரின் குமரி ஆய்வு” பாதிக்கும் செயலாக அமைந்துவிட்டது என்பதையும் இந்த நேரத்தில் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆகவே, மாவட்டங்களில் ஆய்வு செய்யும் “அரசியல் பணியை” ஆளுநர் உடனடியாகக் கைவிட்டு, இப்போது நடைபெற்று வரும் மக்கள் விரோத மைனாரிட்டி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்- அமைச்சருக்கு உத்தரவிட முன் வரவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

    “பெரும்பான்மை உள்ளவர் தான் மாநிலத்தின் முதல்- அமைச்சராக நீடிக்க வேண்டும்”, என்பதை உறுதி செய்யும் தன் அரசியல் சட்டக் கடமையை நிறைவேற்றாமல், மாவட்டரீதியாக இப்படிப்பட்ட ஆய்வுகளை இனி மேலும் தொடர்ந்து, “மாநில சுயாட்சி” கொள்கையையும் “இந்திய நாட்டின் கூட்டாட்சி” தத்துவத்தையும் வலுவிழக்க வைக்க முயன்றால், இனிவரும் காலங்களில் ஆளுநர் ஆய்வுக்குச் செல்லும் மாவட்டங்கள் அனைத்திலும் தி.மு.க.வின் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டிய நிலை உருவாகும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×