search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான்: தகுதி நீக்கத்தை எதிர்த்த நவாஸ் ஷெரிப் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
    X

    பாகிஸ்தான்: தகுதி நீக்கத்தை எதிர்த்த நவாஸ் ஷெரிப் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

    பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரிப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.
    இஸ்லாமபாத்:

    பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி அவர் பதவியை விட்டு விலகினார். அவர்மீது விரிவான விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரிப் அந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக நவாஸ் ஷெரிப் மகன்களான ஹுசைன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் ஆகியோரும், பாகிஸ்தான் நிதி மந்திரி இஷாக் டர் ஆகியோரும் நவாஸ் ஷெரிப்பின் தகுதி நீக்கத்தை எதிர்த்து தனித்தனியாக மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 12-ம் தேதி நீதிபதி எஜாஸ் அப்சல் தலைமையிலான 3 நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. நவாஸ் ஷெரிப்பை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டதும் இதே அமர்வுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெரிய அமர்வுதான் விசாரிக்க வேண்டும் என நவாஸ் ஷெரிப், அவரது மகள், மகன்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கை 5 நீதிபதிகளை கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றுமாறு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    இதையடுத்து, நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னர் நவாஸ் ஷரிப் உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.

    நவாஸ் ஷெரிப்புக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு வழக்கை தொடர்ந்த மனுதாரர்கள் பிரதமர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற அம்சத்தை வலியுறுத்தாத நிலையில் கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி அவரை தகுதி நீக்கம் செய்த சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு செல்லாது என்று நவாஸ் ஷெரிப், அவரது மகன்களான ஹுசைன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இன்று வாதிட்டனர்.

    அவர்களது வாதத்தை புறக்கணித்த சுப்ரீம் கோர்ட் தகுதி நீக்கத்தை எதிர்த்து நவாஸ் ஷெரிப் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.  தள்ளுபடிக்கான காரணம் குறித்த விபரங்கள் பின்னர் முழுமையாக வெளியிடப்படும் என 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×