search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 4309 கன அடியாக சரிவு
    X

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 4309 கன அடியாக சரிவு

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து சரிவு அடைந்தது.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கன மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த 17-ந் தேதி 21 ஆயிரத்து 947 கன அடியாக அதிகரித்தது.

    பின்னர் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. நேற்று 4899 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 4309 கன அடியானது.

    அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக 700 கன அடி தண்ணீரும், மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசன பகுதிகளில் குடிநீர் தேவைக்காக 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.

    நேற்று 53.32 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று சற்று உயர்ந்து 53.69 அடியானது. இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மட்டுமே அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதனால் மழை பெய்யுமா? மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்குமா? இந்த ஆண்டு சாகுபடி பணியை தொடங்கலாமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
    Next Story
    ×