search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற கொள்ளையர்கள்: ராஜஸ்தானில் என்ன நடந்தது?
    X

    சென்னை இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற கொள்ளையர்கள்: ராஜஸ்தானில் என்ன நடந்தது?

    நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற சென்னை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி ராஜஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னை:

    சென்னை கொளத்தூர் ரெட்டேரி லட்சுமிபுரம் கடப்பா சாலையில் மகாலட்சுமி நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையை முகேஷ்குமார் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

    கடந்த மாதம் 16-ந் தேதி மதியம் 1 மணிக்கு அவர் கடையை பூட்டி விட்டு சாப்பிட சென்றிருந்தார். பிற்பகல் 4 மணிக்கு அவர் கடைக்கு வந்தபோது கடை விட்டத்தில் ஓட்டை போட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    3½ கிலோ தங்கம், 4½ கிலோ வெள்ளி மற்றும் 2½ லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் இணை கமி‌ஷனர் சந்தோஷ்குமார், அண்ணா நகர் துணை கமி‌ஷனர் சுதாகர், திருமங்கலம் இன்ஸ்பெக்டர் கமீல்பாட்சா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் ராஜஸ்தானைச் சேர்ந்த கொள்ளையர்கள் மிகவும் திட்டமிட்டு இந்த கொள்ளையை நடத்தி இருப்பது தெரியவந்தது. கடந்த மாதம் தொடக்கத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த சிலர் அந்த நகைக்கடை உள்ள கட்டிடத்தின் உரிமையாளர் பாண்டுரங்கனிடம் சென்று நகை கடைக்கு மேலே உள்ள கட்டிடத்தை துணி வியாபாரம் செய்வதற்காக வாடகைக்கு தருமாறு கேட்டனர்.

    அவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் பாண்டுரங்கன் அவர்களை நகை கடை உரிமையாளர் முகேஷ் குமாரிடம் அழைத்து சென்று இவர்களுக்கு கடை கொடுக்கலாமா? என்று கேட்டார். முகேஷ்குமாரும் தன் நகைக்கடைக்கு மேல் ராஜஸ்தானியர்கள் துணிக்கடை நடத்த ஆட்சேபம் இல்லை, கொடுக்கலாம் என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்தே அந்த ராஜஸ்தானியர்களுக்கு துணிக்கடை வைக்க பாண்டுரங்கன் அனுமதித்தார். ஆனால், அந்த ராஜஸ்தான் கும்பல் 10 நாட்களுக்குள் திட்டமிட்டு விட்டத்தில் ஓட்டை போட்டு நகை - பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டது. இதுபற்றி ஆய்வு செய்த போலீசார் கடந்த 2016-ம் ஆண்டு சென்னையில் உள்ள செல்போன் கடையில் இதுபோன்று ஒரு கொள்ளை நடந்திருப்பதை அறிந்தனர்.

    அந்த கொள்ளையில் தொடர்புடைய ராஜஸ்தானைச் சேர்ந்த நாசுராம், தினேஷ் சவுத்ரி என்ற 2 பேரை முன்பு போலீசார் கைது செய்து விசாரித்து இருந்தனர். அவர்களது புகைப்படத்தை கட்டிட உரிமையாளர் பாண்டுரங்கனிடமும், நகைக்கடை உரிமையாளர் முகேஷ் குமாரிடமும் காட்டி விசாரித்தனர்.

    அப்போது அவர்கள்தான் துணிகடை நடத்த கட்டிடத்தை வாடகைக்கு எடுத்தது தெரியவந்தது. எனவே நகைக்கடையில் கொள்ளையடித்தது அந்த கும்பல்தான் என்பது உறுதியானது.

    ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் 6 தனிப்படைகளை உருவாக்கினார்கள். அதில் ஒரு தனிப்படை சமீபத்தில் ராஜஸ்தானுக்கு சென்றது. அங்கு நாசுராம், தினேஷ் சவுத்ரி உறவினர்கள் 4 பேரை கைது செய்தனர்.

    குற்றவாளிகளை பிடிக்க முடியாவிட்டாலும் அவர்களது உறவினர்கள் மூலம் துப்பு துலக்கி பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் அந்த 4 பேரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மூலம் கொள்ளையர்கள் நாசுராம், தினேஷ் சவுத்ரி இருவரும் ராஜஸ்தானில் பதுங்கி இருக்கும் இடம் தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த கொள்ளையர்களை பிடிக்க போலீசார் புதிய தனிப்படை ஒன்றை உருவாக்கினார்கள். அந்த தனிப்படையில் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் இடம் பெற்று இருந்தனர்.

    நேற்று முன்தினம் அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திற்கு சென்றனர். சென்னையில் உள்ள போலீசார் செல் போனில் வழிகாட்டி உதவி செய்தப்படி இருக்க அவர்கள் குற்றவாளிகள் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்தனர். நேற்று இரவு சுமார் 2 மணியளவில் கொள்ளையர்கள் இருவரும் இருக்கும் ராம்வாஸ் கிராமத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை சுற்றி வளைத்தனர்.

    அந்த கட்டிடத்தின் ஒரு அறைக்குள் நாசுராம், தினேஷ் சவுத்ரி இருவரும் இருந்தனர். அவர்களை பிடிக்க போலீசார் அந்த அறைக்குள் நுழைந்தபோது கொள்ளை கும்பல் திடீரென சரமாரியாக சுட்டது. கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் இருவர் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.

    இதில் பெரியபாண்டியன் உடலை அதிக துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். மற்றொரு இன்ஸ்பெக்டர் முனிசேகர் குண்டு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    அவர்களுடன் சென்றிருந்த போலீஸ்காரர்கள் இன்பரோஸ், குருமூர்த்தி, சுதர்சன் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட இந்த துப்பாக்கி சூட்டால் போலீசார் நிலை குலைந்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

    பிணமாக கிடந்த இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடல் மீட்கப்பட்டது. காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முனிசேகர் உள்பட 5 போலீசாரும் மீட்கப்பட்டு ஜெய்த்ரன் தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் சென்னை போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன், வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் ஜெயராம் ஆலோ சனை நடத்தினார்கள். சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உடலை சென்னைக்கு கொண்டு வரஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக சென்னையில் இருந்து இணை கமி‌ஷனர் முகேஷ் குமார் தலைமையில் சிறப்பு போலீஸ் படை ஒன்று ராஜஸ்தான் விரைந்துள்ளது.

    சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா தேவர்குளம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சாலைபுதூரைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் பெயர் செல்வராஜ். 1969-ம் ஆண்டு பிறந்த இவர் பி.எஸ்.சி. படித்துள்ளார். கடந்த 2000-ம் ஆண்டு இவர் காவல் துறையில் பணியில் சேர்ந்தார். கடந்த 2014-ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார்.

    கடந்த அக்டோபர் மாதம் தான் இவர் மதுரவாயல் போலீஸ் நிலையத்திற்கு மாற்றலாகி வந்து பொறுப்பேற்றார். 2 மாதத்திற்குள் நகைக்கடை கொள்ளை விசாரணை அவருக்கு எமனாக மாறி விட்டது. ஆவடி வசந்த் நகரில் உள்ள நேரு தெருவில் வசித்து வந்த அவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார்.

    சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் ஆவடி சென்று இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவரது மனைவி கதறி அழுதார்.

    அவர் கூறுகையில், “கொள்ளையர்களை எப்படியும் பிடித்து வந்து விடுவேன் என்று சொல்லி சென்றார். இப்படி பிணமாகி விட்டாரே என அழுதார். அவருக்கு கமி‌ஷனரும், போலீசாரும் ஆறுதல் கூறினார்கள்.
    Next Story
    ×