என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்த போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் பல்வேறு கோரிக்கைகளை அவர் வலியுறுத்தி இருந்தார். அதன் விவரம் வருமாறு:-
மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் பல்வேறு நுழைவு தேர்வுகளை எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் மத்திய அரசு நீட் எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் மருத்துவ சேர்க்கை முறை எந்த ஒளிவுமறைவின்றி நடந்து வருகிறது.
இந்த நிலையில் நீட் தேர்வானது நகர் பகுதியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் என்பதால் ஏழை கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்லூரி பெறும் வாய்ப்பை சீரழித்து விடும்.
எனவே நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க சட்டசபையில் 2 சட்ட முன்வடிவுகள் கொண்டு வரப்பட்டது. அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
இந்த 2 சட்ட முன்வடிவுகளுக்கும் ஒப்புதல் கிடைப்பதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் தற்போதைய மருத்துவ சேர்க்கை முறையை தொடர்வதற்கு ஜனாதிபதி ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கு செங்கிப்பட்டி (தஞ்சை மாவட்டம்) தோப்பூர் (மதுரை மாவட் டம்), புதுக்கோட்டை, பெருந்துறை (ஈரோடு மாவட்டம்), செங்கல்பட்டு (காஞ்சீபுரம் மாவட்டம்) ஆகிய 5 இடங்கள் பற்றிய விவரத்தை மத்திய அரசுக்கு தமிழக அரசு வழங்கியது. ஆனால் இது வரை மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
எனினும் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதை மத்திய அரசு உடனடியாக அறிவித்து உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு உதவும் வகையில் மத்திய அரசின் பங்கான ரூ. 168.66 கோடியை உடனே வழங்க வேண்டும். அது போல பிரதமரின் வேளாண் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீட்டு தொகையை வழங்குவதில் காலதாமதம் செய்வது விவசாயிகளின் துயரத்தை அதிகப்படுத்தி உள்ளது.
எனவே அனைத்து காப்பீடு நிறுவனங்களும் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
காவிரி ஆற்றின் வடிநிலங்களின் நீர்பாசன ஏற்பாட்டு முறைகளை மேம்படுத்த வேண்டும். இதற்காக தமிழக அரசு ரூ.14,500 கோடியில் பெரிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்ட பணியினை தேசிய திட்டப் பணியாக அறிவிக்க வேண்டும்.
மேலும் இந்த திட்டத்திற்கு தேவையான தொழில் நுட்ப , பொருளாதார மற்றும் முதலீடு குறித்த ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும். அதற்கேற்ப தமிழக அரசுக்கு உதவும்படி அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
பவானி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கேரளா அரசு தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணைகள் மற்றும் தடுப்பணைகளை கட்டுகிறது. அவற்றை மேற்கொள்ளக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.
நதிகள் இணைப்பு திட்டத்தின்கீழ் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா பென்னாறு, பாலாறு, வைகை, காவிரி, குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கவும் மேற்கு நோக்கி பாயும் பம்பை-அச்சன் கோவில் ஆறுகளை தமிழ்நாட்டுக்கு திருப்பவும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார்.
இதற்கு ஒப்புதல் அளிக்க கேரளா அரசை வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் கடும் வறட்சி காரணமாக குறைந்த அளவே நீர் உள்ளது. இந்த நிலையில் குடிமராமத்து திட்டத்தை தமிழக அரசு மீட்டெடுத்துள்ளது. இதற்கு உதவும் வகையில் மத்திய அரசு ரூ.500 கோடி நிதி உதவி வழங்க வேண்டும்.
மேலும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு ரூ.17,333 கோடி மானியம் நிலுவையில் உள்ளது. அவற்றை விடுவிக்க வேண்டும். அதற்கு தொடர்புடைய துறைகளை தாங்கள் அறிவுறுத்த வேண்டும்.
மேலும் பல்வேறு திட்டங்களை அதிகளவு மானிய தொகைகள் தமிழ்நாட்டுக்கு வழங்கபடாமல் நிலுவையில் உள்ளன. கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு ரூ.1546.88 கோடி, அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு ரூ.1312.20 கோடி நிலுவையில் உள்ளன. இவற்றையும் விடுவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 மீனவர்கள் மற்றும் 134 படகுகள் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தமிழக மீனவர்கள் பாக் ஜலசந்தியில் தங்கள் பாரம்பரிய பகுதியில் பிரச்சினையின்றி மீன் பிடிக்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்