search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அருகே வாலிபரை அடித்து கொன்று சாலையில் பிணம் வீச்சு: அண்ணன்- தம்பி கைது
    X

    புதுவை அருகே வாலிபரை அடித்து கொன்று சாலையில் பிணம் வீச்சு: அண்ணன்- தம்பி கைது

    வாலிபரை அடித்து கொன்று சாலையில் பிணத்தை வீசிய அண்ணன் மற்றும் தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    சேதராப்பட்டு:

    புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான இடையன்சாவடி களத்து மேட்டு தெரு ஜெயமூர்த்தி வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38) கொத்தனார். இவருக்கு மரகதவல்லி என்ற மனைவியும், 4 வயதிலும், 3 வயதிலும் 2 பெண் குழந்தைகளும் உள்ளன.

    மொரட்டாண்டி பிரத்தியங்கரா கோவில் அருகே இளவரசன் (27) என்பவர் தனது அண்ணன் மணிகண்டனுடன் சேர்ந்து மாட்டு பண்ணை நடத்தி வருகிறார். அங்கேயே அவரது வீடும் உள்ளது. சக்திவேலும், இளவரசனும் நண்பர்கள் ஆவர்.

    இளவரசன் நேற்று மாலை சக்திவேல் வீட்டுக்கு வந்து அவரை தன்னுடன் அழைத்து சென்றார். இருவரும் சக்திவேலின் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்றனர்.

    நேற்று மாலை நீண்ட நேரம் ஆகியும் சக்திவேல் வீடு திரும்பவில்லை. எனவே, அவரது மனைவி மரகதவல்லி சக்திவேலின் போனில் தொடர்பு கொள்ள முயன்றார். போன் இணைப்பு கிடைக்க வில்லை.

    இந்த நிலையில் இரவு 10 மணியளவில் மொரட்டாண்டியில் இருந்து இடையன்சாவடி செல்லும் செம்மண் சாலையில் வாலி பர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது மேலே மோட்டார் சைக்கிள் விழுந்து கிடந்தது.

    அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து விட்டு ஆரோவில் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். யாரோ விபத்தில் சிக்கி இறந்து கிடக்கிறார் என்று கூறினார்கள். 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர்.

    உடனே போலீஸ் இன்ஸ் பெக்டர் பிரதீப்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பிணத்தை கைப்பற்றி ஜிப்மருக்கு அனுப்பி வைத்தனர். வாகனம் மோதிதான் அவர் இறந்து இருப்பதாக கருதப்பட்டது.

    ஆனால், அவரது உடலை பார்த்த டாக்டர்கள் இது வாகன விபத்து அல்ல, கொலை என்று கூறினார்கள். அவருடைய கழுத்து மற்றும் உடல் பகுதிகளில் அடிபட்ட காயங்களும், வெட்டு காயங்களும் இருந்தன. எனவே, போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தினார்கள்.

    பிணம் கிடந்த இடத்தில் அவ்வளவாக ரத்தம் காணப் படவில்லை. எனவே, வேறு எங்கோ கொலை செய்து விட்டு பிணத்தை இங்கு கொண்டு போட்டு விபத்து போல் ஜோடித்து இருப்பது தெரிந்தது.

    சக்திவேலை இளவரசன் அழைத்து சென்ற வி‌ஷயத்தை போலீசாரிடம் குடும்பத்தினர் தெரிவித்தனர். எனவே, போலீசார் இளவரசன் பண்ணை வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு இருந்த கொட்டகை அருகே ரத்தக் கறைகள் கிடந்தன. அவற்றை சாக்கால் துடைத்திருந்த அடையாளங்களும் இருந்தன.

    எனவே, அந்த இடத்தில் வைத்துதான் சக்திவேலை கொன்று விட்டு பின்னர் பிணத்தை சாலையில் போட்டது உறுதிப்படுத்தப்பட்டது. அவரை இளவரசன்தான் கொலை செய்திருக்க வேண்டும் என கருதி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    போலீசார் வந்த போது, இளவரசன் வீட்டில்தான் இருந்தார். அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அந்த நேரத்தில் இளவரசன் மிகுந்த குடிபோதையில் இருந்தார்.

    எனவே, அவர் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லவில்லை. போதை தெளிந்த நிலையில் இன்று காலை மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது சக்திவேலை நான் தான் கொன்றேன் என்று இளவரசன் கூறினார்.

    சக்திவேலும், இளவரசனும் நெருங்கிய நண்பர் என்பதால் சக்திவேல் அடிக்கடி இளவரசன் பண்ணை வீட்டுக்கு வருவது உண்டு. அப்போது அங்கு இருக்கும் கோடாரி, மண்வெட்டி, கடப்பாரை போன்ற கருவிகளை யாரிடமும் கேட்காமலேயே சக்திவேல் எடுத்து செல்வார். பின்னர் அவற்றை திருப்பி கொடுப்பது இல்லை.

    இதனால் இளவரசனின் அண்ணன் மணிகண்டன் தனது தம்பியிடம் இதுபற்றி சொல்லி சக்திவேலை கண்டித்து வை என்று கூறியுள்ளார். இதற்காகத்தான் நேற்று மாலை சக்திவேலை தனது வீட்டுக்கு அழைத்து வந்து இளவரசன் கண்டித்தார்.

    பின்னர் இருவரும் சமரசம் அடைந்தார்கள். அடுத்து சேதராப்பட்டுக்கு சென்று சக்திவேல் மதுபாட்டில் வாங்கி வந்தார். சக்திவேலும், இளவரசனும் பண்ணை வீட்டில் உள்ள கொட்டகை அருகே அமர்ந்து மது குடித்தார்கள்.

    இருவருக்கும் போதை தலைக்கேறிய நிலையில் மீண்டும் மண்வெட்டி, கோடாரி பிரச்சினை பற்றி அவர்கள் பேசினார்கள். இதில் அவர்களுக்குள் கடும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த இளவரசன் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் சக்தி வேலை தாக்கினார். கத்தி குத்தும் விழுந்தது.

    இதில், அந்த இடத்திலேயே சக்திவேல் உயிர் இழந்தார். பின்னர் இளவரசன் இதுபற்றி தனது அண்ணன் மணிகண்டனிடம் கூறினார். இருவரும் சேர்ந்து கொலையை மறைக்க முயற்சித்தனர். சக்திவேல் பிணத்தை சாலையில் கொண்டு போட்டு விபத்து போல் ஜோடித்து விடலாம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி பிணத்தை தூக்கி கொண்டு சாலையில் போட்டதுடன், அதன் அருகிலேயே மோட்டார் சைக்கிளையும் போட்டு விட்டு சென்றனர். ஆனால், போலீஸ் விசாரணையில் உண்மையை அவர்கள் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×