search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    த.மா.கா. பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்: ஜி.கே.வாசன்
    X

    த.மா.கா. பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்: ஜி.கே.வாசன்

    திருச்சியில் நடைபெறும் த.மா.கா.வின் பொதுக்கூட்டம் தமிழகத்தில் ஓர் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பெருந்தலைவர் காமராஜர் மற்றும் மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோர் வழியில் தமிழ் மக்கள் நலன் காக்கவும், வளமான தமிழகம் படைக்கவும், வலிமையான பாரதம் உருவாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டது.

    இதனைத் தொடர்ந்து 4-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கின்ற த.மா.கா. தொடர்ந்து வெற்றிநடை போடுவதற்கு அடித்தளமான கூட்டமாக எனது தலைமையில் வருகின்ற 25-ந்தேதி (சனிக்கிழமை) அன்று மாலை 5மணி முதல் இரவு 9மணி வரை திருச்சி மாநகரத்தில் உள்ள உழவர்சந்தை மைதானத்தில் மாபெரும் கூட்டம் நடைபெற உள்ளது.

    நாங்கள் த.மா.கா.வை தமிழகத்தில் முதன்மை இயக்கமாக கொண்டு வருவோம் என்பதை நிரூபிக்கும் கூட்டமாக இக்கூட்டம் அமையும். அதுமட்டுமல்ல தனித்துவம் கொண்ட மக்கள் இயக்கமாக த.மா.கா. வை முன்னிறுத்துவதால், வரலாற்று சிறப்பு வாய்ந்த கூட்டமாக இது அமையும்.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாங்கள் தமிழகத்தில் உள்ள முக்கியப் பிரச்சனைகளை எல்லாம் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து மக்கள் சார்பில் கோரிக்கையாக வைத்திருக்கிறோம். சில கோரிக்கைகளுக்கு சாதகமான முடிவும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு தொடர்ந்து கொண்டு சென்று, சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர அனைத்து நல்ல முயற்சிகளையும் மேற் கொள்வோம்.

    நாங்கள் த.மா.கா. வை முன்னிலைப்படுத்துவோம், இயக்கத்தினரை ஊக்கப்படுத்துவோம், மக்கள் வாழ்க்கையில் முன்னேற வழி வகுப்போம் என்ற நல்ல நோக்கத்தோடு நடைபெற இருக்கின்ற இந்த 4-ம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று த.மா.கா. தொண்டர்கள் மற்றும் பொது மக்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

    த.மா.கா. வின் இந்த கூட்டம் தமிழகத்தில் ஓர் திருப்புமுனையை ஏற்படுத்துவதோடு, தமிழக அரசியலில் த.மா.கா. மாற்று சக்தியாக விளங்கும்.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

    Next Story
    ×