search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் இன்று முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
    X

    மதுரையில் இன்று முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

    மதுரை அனுப்பானடியில் இன்று முன்னாள் கவுன்சிலர் ஆட்டோ கணேசன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் ஆட்டோ கணேசன் (வயது 54). 57-வது வார்டு முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் 2 முறை சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றுள்ளார்.

    இவரது மனைவி காதர் அம்மாள். இவரும் அதே பகுதியில் மதுரை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு இருமுறை சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் இருவரும் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் ஆட்டோ கணேசன் அனுப்பானடி ரெயில்வே கேட் அருகே உள்ள மீன் கடை அருகில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று ஆட்டோ கணேசனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஆட்டோ கணேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து தெப்பக்குளம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கணேசனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அனுப்பானடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொலையுண்ட ஆட்டோ கணேசன் 10 வருடங்களுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தார். எனவே பழிக்குப்பழியாக ஆட்டோ கணேசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    ஆட்டோ கணேசனுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
    Next Story
    ×