search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே சொத்து பிரச்சினையில் தாய்-மகன் படுகொலை
    X

    திருச்சி அருகே சொத்து பிரச்சினையில் தாய்-மகன் படுகொலை

    திருச்சி அருகே சொத்து பிரச்சினையில் தாய், மகன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    டால்மியாபுரம்:

    திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த புள்ளம்பாடி அருகே உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 60). இவரது மனைவி தனபாப்பு (50).

    தனபாப்புவின் அண்ணன் ராமசாமி. முன்னாள் பஞ்சாயத்து தலைவரான அவர் இறந்து விட்டார். இவரது மகன் ராஜகோபாலுக்கும், அத்தை தனபாப்புவின் குடும்பத்திற்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்தது.

    ராஜகோபால் கடன் பிரச்சினையில் இருந்ததால் தங்களது குடும்பத்திற்கு சொந்தமான இடத்தை விற்பதற்காக முயற்சி செய்து வந்தார். ஆனால் அதற்கு அத்தை தனபாப்பு குடும்பத்தினர் மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று தனபாப்புவின் கணவர் பழனிச்சாமி வெளியூர் சென்று விட்டார். வீட்டில் தனபாப்புவும், மகன் சத்தியமூர்த்தியும் (32) மட்டும் இருந்தனர்.

    இன்று அதிகாலை 3 மணிக்கு டிராக்டரில் ராஜகோபால் கோபத்துடன் அத்தை வீட்டிற்கு சென்றார். அங்கு தூங்கி கொண்டிருந்த தனபாப்புவையும், மச்சான் சத்தியமூர்த்தியையும் கட்டை மற்றும் கம்பியால் சரமாரியாக அடித்துக் கொன்றார்.

    பிறகு அவர்கள் இருவரது உடலையும் வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து ரோட்டில் போட்டார். பிறகு அவர்களது உடலில் டிராக்டரை ஏற்றி நசுக்கினார்.

    பொதுமக்கள் பார்த்தால் விபத்தில் இருவரும் இறந்து விட்டதாக ஏமாற்றி நாடகமாடலாம் என நினைத்துள்ளார். ஆனால் இன்று அதிகாலை இருவர் உடலையும் பார்த்த கிராம மக்கள் லால்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் லால்குடி தினேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று இருவர் உடலையும் மீட்டு லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே ராஜகோபால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். சம்பவம் நடந்த இடத்தில் பொதுமக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

    பழனிச்சாமி வெளியூர் சென்று விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த அவர் மனைவி மற்றும் மகன் உடலை பார்த்து கதறி அழுதார்.

    Next Story
    ×