search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெகன்
    X
    ஜெகன்

    புதுவை பா.ஜனதா இளைஞரணி தலைவர் வெட்டிக்கொலை

    புதுவை பா.ஜனதா இளைஞரணி தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கும்பல் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை குருமாம்பேட்டை அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெகன் என்ற ஜெகன்நாதன் (வயது 35).

    பா.ஜனதா கட்சியின் வில்லியனூர் மாவட்ட இளைஞரணி தலைவராக உள்ளார். ஜெகன் நேற்று இரவு 7.30 மணியளவில் குருமாம்பேட்டை சந்திப்பில் இருந்து மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    மொபட் குருமாம்பேட் அடுக்குமாடி குடியிருப்பு 3-வது குறுக்கு தெருவில் சென்ற போது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் ஜெகனை வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.

    இதில் நிலைகுலைந்து தரையில் விழுந்த ஜெகன் சுதாரித்துக் கொண்டு எழுந்து ஓடினார். ஆனால், மர்ம கும்பல் அவரை விடாமல் துரத்தி சென்று சரமாரியாக வெட்டினர்.

    இதனால் ஜெகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். பின்னர், அந்த மர்ம கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது.

    தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், ஜெகன் கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடந்த மொபட், செல்போன் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர்.

    ஜெகன் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுவை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட ஜெகன் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    ஜெகனை கொலை செய்த கும்பல் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் கடந்த மாதத்தில் தொடர்ச்சியாக காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் என அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக பா.ஜனதா இளைஞரணி நிர்வாகி கொலை செய்யப்பட்டிருப்பது புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




    Next Story
    ×