search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இமாச்சலப்பிரதேசம் மாநில முதல் மந்திரியாக நாளை ஜெய்ராம் தாக்கூர் பதவியேற்பு - பிரதமர் மோடி பங்கேற்பு
    X

    இமாச்சலப்பிரதேசம் மாநில முதல் மந்திரியாக நாளை ஜெய்ராம் தாக்கூர் பதவியேற்பு - பிரதமர் மோடி பங்கேற்பு

    இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக ஜெய்ராம் தாக்கூர் நாளை பதவியேற்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
    சிம்லா:

    சமீபத்தில் நடந்து முடிந்த இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 68 இடங்களில் பா.ஜ.க. 44 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை பெற்றது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேம் குமார் துமால் சுஜான்பூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    இதைதொடர்ந்து அம்மாநிலத்தின் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்யும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மற்றும் அக்கட்சியின் மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் சிம்லா நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற பா.ஜ.க. தலைவராகவும் புதிய முதல் மந்திரியாகவும் ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார்.

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்தி பரிஷத் அமைப்பில் ஆரம்பத்தில் இணைந்து செயலாற்றிய ஜெய்ராம் தாக்கூர், கடந்த 1998-ம் ஆண்டு சாச்சியோட் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    2007 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையில் இமாச்சலப்பிரதேசம் மாநில ஊரகம் மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை மந்திரியாகவும் இவர் பதவி வகித்தார்.

    அதே தொகுதியில் தொடர்ந்து ஐந்துமுறை வெற்றி பெற்றுள்ள இவர் இந்த தேர்தலில் 11,524 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பா.ஜ.க. தொண்டர்களுடனும், பொதுமக்களிடமும் மிக இனிமையாகவும், எளிமையாகவும் பழகும் இயல்புடையவர் என அறியப்படும் ஜெய்ராம் தாக்கூர்(52) இமாச்சலப்பிரதேசத்தின் 13-வது முதல் மந்திரியாக சிம்லா நகரில் உள்ள ரிட்ஜே திடலில் நாளை (புதன்கிழமை) பதவியேற்கவுள்ளார்.



    இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்கரி, அனந்த் குமார், இமாச்சலப்பிரதேசம் மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் தாவர் சந்த் கேலாட், அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார், கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கர், உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், ராஜஸ்தான் முதல் மந்திரி வசுந்தரா ராஜே, சத்தீஸ்கர் முதல் மந்திரி சி.எம்.ரமன் சிங், மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னவிஸ், அசாம் முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால், அருணாச்சலப்பிரதேசம் முதல் மந்திரி பேமா கன்டு, ஜம்மு-காஷ்மீர் துணை முதல் மந்திரி நிர்மல் சிங், உத்தரப்பிரதேசம் துணை முதல் மந்திரிகள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் சர்மா, பீகார் துணை முதல் மந்திரி சுஷில் குமார் மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பதவியேற்பு விழாவுக்கு நாளை காலை சுமார் 10.45 மணியளவில் சிம்லா நகரை வந்தடையும் பிரதமர் மோடியை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பதவியேற்பு விழாவை சிம்லா நகரில் உள்ள பல பகுதி மக்களும் காணும் வகையில் நகரின் பல பகுதிகளில் பிரமாண்டமான எல்.இ.டி. தொலைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×