search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர்: ஷோபியான் என்கவுண்டர் - 3 ஹிஸ்புல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்
    X

    காஷ்மீர்: ஷோபியான் என்கவுண்டர் - 3 ஹிஸ்புல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பலியான ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள காதிபோரா பகுதிகளில் பாதுகாப்பு படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, ஓரிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

    தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும், அங்கு பதுங்கியிருந்த சில தீவிரவாதிகளை சரணடையுமாறு அவர்கள் கூறினர்.

    ஆனால், அதனை ஏற்க மறுத்த தீவிரவாதிகள் வீரர்களை நோக்கி தாக்குதல் நடத்த தொடங்கினர். இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தினர். சில மணிநேரங்கள் நீடித்த இந்த சண்டையின் மூன்று ஹிஸ்புல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, இன்று காலை புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் ரோந்து வாகனம் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதியை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×