search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்: கெஜ்ரிவால்
    X

    விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்: கெஜ்ரிவால்

    விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வற்புறுத்தி உள்ளார்.
    புதுடெல்லி:

    விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வற்புறுத்தி உள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய விவசாயிகள் பிரிவு சார்பில் டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் உள்பட அனைத்து மாநில முக்கிய நிர்வாகிகள் மற்றும் விவசாய பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளின் பிரச்சினையில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை. அமைதியாக போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள். இதே போக்கைத்தான் முன்பு காங்கிரஸ் அரசும் கடைப்பிடித்தது. அதனால்தான் மக்கள் காங்கிரசை புறந்தள்ளி பா.ஜனதாவை ஆதரித்தனர்.

    இப்போது பா.ஜனதாவும் அதேபோல் செயல்படுவதால் இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று மக்கள் உணர்ந்துள்ளனர். ஏழைகளை சுரண்டுவதும், ஓட்டுக்காக மக்களை பயன்படுத்துவதும்தான் அந்த கட்சிகளின் வேலை என்பதையும் தெரிந்து கொண்டனர்.

    விவசாயிகளை காப்பாற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்துவதாக பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியது. ஆனால் அதை அமல்படுத்தாமல் விவசாயிகளின் முதுகில் குத்திவிட்டது. அமல்படுத்த முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரமும் தாக்கல் செய்து உள்ளது.

    விவசாயிகள் கடனில் தத்தளிக்கிறார்கள். தற்கொலை செய்யும் சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்றவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடுகிறார்கள். அவர்கள் தப்புவதற்கு அரசும் உதவி செய்கிறது. ஆனால் அப்பாவி விவசாயிகளை பாடாய் படுத்துகிறது.

    விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க, விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க நாடு முழுவதும் ஆங்காங்கே குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும். விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கி சூட்டில் இறந்த விவசாயிகளை தியாகிகளாக அங்கீகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். 
    Next Story
    ×