search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா உடல்நிலையை மறைத்து மக்களிடம் பொய் சொன்னது ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.: ஸ்டாலின்
    X

    ஜெயலலிதா உடல்நிலையை மறைத்து மக்களிடம் பொய் சொன்னது ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.: ஸ்டாலின்

    அப்பல்லோவில் மரண படுக்கையில் இருந்த ஜெயலலிதாவின் உண்மையான உடல்நிலையை மறைத்து பொதுமக்களிடம் பொய் கூறியது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்தான் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆர்.கே.நகரில் கடந்த முறை எந்த தினகரனை எடப்பாடி பழனிசாமி விழுந்து விழுந்து ஆதரித்தாரோ அவரை இப்போது துரோகி என்கிறார். அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமியை துரோகி என வர்ணித்து சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் பிரச்சாரம் செய்கிறார்.

    ​யாருக்கு யார் துரோகம் இழைத்தார்கள், யாரை யார் காட்டிக் கொடுத்தார்கள் என்பதெல்லாம் அவர்களுக்குள் நடக்கும் உள்குத்துச் சண்டை.

    ஆனால், இவர்கள் எல்லோருமே சேர்ந்து செய்த கூட்டுத் துரோகத்தினால் தான், ஜெயலலிதாவின் மரணத்தில் இன்றளவும் கனத்த மர்மம் நீடிக்கிறது.

    இ.பி.எஸ், ஓ.பி.எஸ், டி.டி.வி ஆகிய எல்லோருமே ஜெயலலிதா 72 நாட்கள் மரணப் படுக்கையில் இருந்த போது சசிகலாவின் பக்கம் நின்று கொண்டு, ஜெயலலிதாவின் உண்மையான உடல்நிலையை பொதுமக்களிடம் மட்டுமின்றி, அ.தி.மு.க. தொண்டர்களிடமும் மறைத்து, பொய் மூட்டைகளை நாள்தோறும் அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தவர்கள்.



    ஜெயலலிதாவின் மரணச்செய்தி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்தில், சசிகலா தயவில் முதல்-அமைச்சரான ஓ.பி.எஸ், அந்த மரணம் குறித்து அப்போது எந்த சந்தேகமும் எழுப்ப முன்வர வில்லை. தன்னுடைய பதவியை சசிகலா பறித்துக் கொள்கிறார் என்ற நிலை வந்ததும் ‘தர்மயுத்தம் என்ற போலி நாடகம்’ போட்ட போது பேசிய ‘டயலாக்’தான் நீதி விசாரணை என்பது. பதவி இருந்தவரை பவ்யம் காட்டி, வாய் திறக்காத உத்தமர் இவர்.

    ​இப்போது இவருடன் இணைந்து நின்று ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அப்போது சசிகலா தயவில் பதவியை அடைந்தபோது, “ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இல்லை, விசாரணை தேவையில்லை”, என்று சொன்னவர்.

    ஆனால், ஜெயலலிதாவுடன் சேர்ந்து சசிகலா செய்த ஊழலால், குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குச் சென்ற பிறகு, டெல்லியில் பா.ஜ.க. நடத்திய கட்டப் பஞ்சாயத்தின் தொடர்ச்சியாக, ஓ.பி.எஸ்.சுடன் சேர்வதற்கு, அதே ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ‘பல் இல்லாத’ விசாரணைக் கமி‌ஷனை அறிவிக்கிறார்.

    ​இவர்கள் இருவரையும் எதிர்த்து அரசியல் செய்யும் டி.டி.வி.தினகரன் இப்போதும் சசிகலா படத்துடன் வலம் வருகிறார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த வீடியோ காட்சிகள் தங்களிடம் இருக்கின்றன என்கிறார். ஆனால், அதைப் பொது மக்களிடமும் அ.தி.மு.க. தொண்டர்களிடமும் வெளியிட்டு, அவர்களின் மனதில் உள்ள சந்தேகத்தை அகற்றுவதற்கு அவரும் தயாராக இல்லை.



    இரட்டைக்குழல் துப்பாக்கி பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். ஊராரிடமிருந்து உண்மையை மறைக்கும் இந்த மூன்று குழல் அல்லது முக்கோணத் துப்பாக்கியை ஆர்.கே.நகர் வாக்காளர்கள் அடையாளம் கண்டு, அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இன்றைக்கு ஜெயலலிதாவை படமாக்கி, அவரது பெயரை வைத்து வாக்குகள் கேட்டு வரும் இவர்கள் தான், ஜெயலலிதாவின் மரண மர்மத்துக்கு பெரும் துணையாக இருந்து, ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வருவதற்கு அடிப்படைக் காரணமானவர்கள்.

    தங்களுக்குப் பதவிச் சுகம் தந்து வாழ்வளித்தவரின் தொகுதியில் இடைத் தேர்தலைத் திட்டமிட்டுத் திணித்துவிட்டு, அவரது பெயரிலான ஆட்சியைப் பயன்படுத்தி கோடிகோடியாய்க் கொள்ளையடித்த பணத்தைக் கொட்டி, வாக்காளர்களை விலைபேசி வெற்றி பெற்றுவிடலாம் என்ற நயவஞ்சகத்துடன் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கயவர்களைப் போல நள்ளிரவில் நுழைய முயற்சிக்கிறார்கள்.

    கடந்தமுறை இடைத் தேர்தல் நிறுத்தப்பட்டதற்குக் காரணம், பணப்பட்டு வாடாதான் என்பதை நாடறியும். சுகாதாரத்துறை அமைச்சர் ‘குட்கா’ புகழ் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து அதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஏறத்தாழ 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா நடந்ததையும் அதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருந்ததையும் அந்த ஆவணங்கள் அம்பலப்படுத்தின.

    அப்போது அவர்கள் பணம் கொடுத்தது தினகரனுக்காக. இப்போது, தினகரனை எதிர்த்து நிற்கும் மதுசூதனனுக்காக அதைவிட அதிகமாக பணம் தரத் தயாராக இருக்கிறார்கள் என்றால், இவர்கள் தமிழக அரசின் கஜானாவையே மொத்தமாக களவாடியிருக்கிறார்கள் என்பதை ஆர்.கே.நகர் வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×