search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளிர்கால கூட்ட தொடர்: புதுவை சட்டசபை 23-ந் தேதி கூடுகிறது
    X

    குளிர்கால கூட்ட தொடர்: புதுவை சட்டசபை 23-ந் தேதி கூடுகிறது

    புதுவை சட்டமன்றத்தின் குளிர்கால கூட்ட தொடர் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இந்த தகவலை முதல்-அமைச்சர் நாராயணசாமி அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    மத்திய அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீட்டுக்கான அனுமதி கிடைக்காததால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த மே மாதம் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய சட்டமன்றம் கூடியது.

    ஜூன் மாதம் 16-ந்தேதி பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்தது. 6 மாத காலத்திற்குள் சட்டசபையை கூட்ட வேண்டும் என்பது விதிமுறையாகும். இதன் அடிப்படையில் புதுவை சட்டமன்றம் மீண்டும் கூடுகிறது.

    வருகிற 23-ந்தேதி புதுவை சட்டமன்றத்தின் குளிர்கால கூட்ட தொடர் தொடங்குகிறது. இந்த தகவலை முதல்-அமைச்சர் நாராயணசாமி அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் தெரிவித்தார்.


    அவர் மேலும் கூறும் போது, சட்டமன்றம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை சபாநாயகர் வைத்திலிங்கம் முடிவு செய்வார் என்று கூறியுள்ளார். சபாநாயகர் வைத்திலிங்கம் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வங்காளதேசம் சென்றுள்ளார்.

    மாநாடு முடிந்து சபாநாயகர் வைத்திலிங்கம் நாளை (வெள்ளிக்கிழமை) இரவே புதுவை திரும்புகிறார். இதன் பிறகே கூட்ட தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும்.

    இருப்பினும், கூட்ட தொடர் ஓரிரு நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று தெரிகிறது. கடந்த சட்டசபை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

    இந்த தீர்மானத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் இயற்றப்பட உள்ளது.

    புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின் பேரில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க முடியும். ஆனால் மத்திய உள்துறை 3 நியமன எம்.எல்.ஏ.க்களை தன்னிச்சையாக நியமித்தது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணமும் செய்து வைத்துள்ளார். ஆனால், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சட்ட சபையில் இருக்கை, அலுவலகம் உள்ளிட்டவை இதுவரை ஒதுக்கப்படவில்லை.

    அதிகாரம் படைத்த உரிய நபரிடம் இருந்து நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக உத்தரவு வரவில்லை என்றும், நியமன எம்.எல்.ஏ. தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாலும் அவர்களை அங்கீகரிக்க முடியாது என சபாநாயகர் வைத்திலிங்கம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    இதற்கிடையே நியமன எம்.எல்.ஏ. விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், புதுவை அரசுக்கு விளக்கம் அனுப்பி உள்ளது. இந்த விளக்கத்தை ஏற்று நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க சபாநாயகர் அனுமதிப்பாரா? என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.
    Next Story
    ×