search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்கு தடை: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
    X

    ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்கு தடை: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

    ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். வேலைநிறுத்தம் இல்லாமல் வேறு வழிகளை கையாளலாம் என்றும் அறிவுறுத்தினர்.
    மதுரை:

    ஜாக்டோ-ஜியோ என்னும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் இன்று (7-ம் தேதி) முதல் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியாக ஈரோட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் சிலவற்றை ஏற்று செயல்படுத்த அக்டோபர் 15-ந் தேதி வரை காலம் அவகாசம் தர வேண்டும் என்று எடுத்து கூறப்பட்டது.

    இதற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் முரண்பட்ட கருத்துக்கள் நிலவியது. முதல்வரின் கோரிக்கையை ஏற்று கொள்வதாக ஒரு சில சங்கங்கள் தெரிவித்தன.

    சில சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்தன. இதனால் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு 2 ஆக உடைந்தது.

    அரசு ஊழியர் சங்கம் தலைமையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒரு பகுதியினர் இன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், பட்டதாரி ஆசிரியர் கழகம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், இடைநிலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 17 சங்கங்கள் பங்கேற்றன.

    இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஜாக்டோ -ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சேகரன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும், நீதிபதி கூறுகையில், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. வேலை நிறுத்தத்தை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. அவர்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலைநிறுத்தம் இல்லாமல் வேறு வழிகளை கையாளலாம். நிர்வாகம், மருத்துவம், கல்வி மற்றும் போக்குவரத்து பாதிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மாணவர்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டும், என்றனர்.

    மேலும், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பதில் தரவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    Next Story
    ×