search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீராக குடிநீர் வழங்ககோரி காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
    X

    சீராக குடிநீர் வழங்ககோரி காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

    குளச்சல் அருகே குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    குளச்சல்:

    குளச்சல் அருகே உள்ள சைமன் காலனி, கோடிமுனை மீனவ கிராமங்களுக்கு தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

    இதனால், ஆத்திரமடைந்த சைமன் காலனி, கோடிமுனை கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை 10 மணியளவில் சைமன் காலனி ஊராட்சி அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் திரண்டனர். அவர்கள், அலுவலகத்தை திறக்க விடாமல் முற்றுகையிட்டு குடிநீர் வினியோகத்தை சீர் செய்யக்கோரி கோஷமிட்டனர். பெண்களுக்கு ஆதரவாக கோடிமுனை ஆலய பங்குத்தந்தை ஸ்டீபன் ஹென்றி, சாந்திதான் பெண்கள் இயக்க தலைவி ஆல்பின்மேரி, பங்குபேரவை உறுப்பினர்கள் உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சைமன்காலனி-குளச்சல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீஸ் உதவி சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமல் இங்கிருந்து செல்ல வேண்டும் என போராட்டக்காரர்கள் கூறினர். சிறிது நேரத்துக்கு பிறகு சாலையோரம் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சீரான முறையில் குடிநீர் கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×