search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அலுவலகங்கள் முன்பு 25-ந்தேதி ஆர்ப்பாட்டம்: தமிழக விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்
    X

    கலெக்டர் அலுவலகங்கள் முன்பு 25-ந்தேதி ஆர்ப்பாட்டம்: தமிழக விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்

    விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு 25-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தர்மபுரியில் நடந்த தமிழக விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    தர்மபுரி:

    தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடந்த போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் உழவர்தின விவசாயிகள் மாநில மாநாடு தர்மபுரி வள்ளலார் திடலில் நேற்று நடைபெற்றது.

    மாநாட்டில் சங்க மாநில பொதுச்செயலாளர் சுந்தரம், மாநில பொருளாளர் வேலுமணி, மாநில துணை பொதுச்செயலாளர் ராஜாசிதம்பரம், மாநில பிரசார செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

    உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவிற்கு கோவை வையம்பாளையத்தில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க சட்டமன்றத்தில் அறிவித்து நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மணிமண்டப பணிகளை உடனே தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வங்கிகள் அடியாட்களை வைத்து விவசாயிகளிடமிருந்து கடனை வசூலிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

    மின் இணைப்பிற்காக விண்ணப்பித்து தயார் நிலையில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தாமதமின்றி மின் இணைப்பு வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தர வேண்டும்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பிரதமர் அளித்த வாக்குறுதியின்படி தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். ஹீராகுட்-மகாநதி -கோதாவரி -கிருஷ்ணா -காவிரி உள்ளிட்ட தென்னிந்திய நதிகள் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

    வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைபடி உற்பத்தி செலவுக்கு மேல் கூடுதலாக 50 சதவீதம் விவசாய விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட உணவு மண்டலமாக அறிவித்து, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை கைவிட வேண்டும்.

    தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் மத்திய, மாநில அரசுகள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×