search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அற்புதங்களைக் காண்பதால் வரும் விசுவாசம்
    X

    அற்புதங்களைக் காண்பதால் வரும் விசுவாசம்

    அற்புத அதிசயங்களில் காட்டும் ஈடுபாட்டை விட்டுவிட்டு, உண்மையான பக்தியை அடைவதற்கு முதலில் முடிவு செய்வோம். நமது முடிவுக்கு ஏற்றபடி உண்மை பக்திக்கான வழியை இறைவன் நமக்கு திறந்து தருவார்.
    நாம் விரும்பும் காரியமெல்லாம் நடக்க வேண்டுமென்பதற்காக அதிகாரம், அந்தஸ்துள்ள குறிப்பிட்ட சிலரை சார்ந்துவிடுகிறோம். அவர்கள் சொல்லும் நல்லது, கெட்டது எல்லாவற்றையும் செய்துகொடுக்கிறோம். அவரது விசுவாசி என்று சொல்லும் அளவுக்கு நம்மை நாம் அவர்களுக்காக அர்ப்பணித்து விடுகிறோம்.

    கொள்கைகளுக்காக மிகச்சிலர் இப்படிப்பட்ட அர்ப்பணிப்பில் இருந்தாலும், பெரும் பாலானோர் சுயநலத்துக்காகவே ‘விசுவாசி’ என்ற பட்டத்தை வைத்துக் கொள்கிறார்கள். எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால் அவர் களின் விசுவாசமும் விலகிவிடும்.

    காலப்போக்கில் கொள்கை, கோட்பாடுகளில் மாறுதல்கள் வரும்போதும் அவர்கள் மீது வைத்த விசுவாசம் அசைக்கப்படுகிறது. ஆக, மனிதர்கள் மீது வைக்கப்படும் விசுவாசம் என்பது சூழ்நிலைகளின் மாற்றத்தின் அடிப்படையிலானவை என்பதும் அவை நிரந்தரமல்ல என்பதும் நிஜம்.

    எவ்வளவு பெரிய அந்தஸ்துள்ளவன் என்றாலும் அவன் மீது வைக்கும் விசுவாசத்தை கிறிஸ்தவ மார்க்கம் ஏற்காது. இறைவன் மீது வைக்கும் விசுவாசத்தை மட்டுமே வேதம் வலியுறுத்துகிறது. இந்த விசுவாசத்தின் மூலம்தான் கிறிஸ்தவ பக்தி வாழ்க்கை வாழ முடியும். அதோடு நேர்மையான உலக வாழ்க்கையை வாழ்வதற்கும் அந்த விசுவாசம்தான் வழியைத் திறக்கிறது.

    விசுவாசத்தைப் பற்றி வேதம் பல கருத்துகளைக் கூறுகிறது. ஆனாலும் அடிப்படையில் விசுவாசத்தை இரண்டாக வேதம் பிரிக்கிறது. ஒன்று, அற்புத அதிசயங்களைக் கண்டு, அதன் அடிப்படையில் இறைவனை விசுவாசிப்பது. மற்றொன்று, இறைவனின் அற்புத அதிசயங்களை காணாவிட்டாலும், அவரது உபதேசத்தில் உள்ள உண்மைகளை உணர்ந்து அவரை விசுவாசிப்பது. கண்டு விசுவாசிப்பது, காணாமல் விசுவாசிப்பது என்று விசுவாசத்தை இரண்டாக வேதம் பிரித்துக்காட்டுகிறது.

    உதாரணமாக, ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக் கிறது. மற்றவர்களை முகம் பார்த்து அடையாளம் காணும் வளர்நிலையை குழந்தை அடையும் முன்பே வேறு நாட்டுக்கு தந்தை போய்விட்டார். மனைவி, குழந்தைக்கு தேவையானதை அவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பிக்கொண்டே இருக்கிறார். அதை சற்று வளர்ந்த அந்தக் குழந்தையிடம் தாய் கூறுகிறாள். மேலும், தந்தை உன்னை நன்றாக படிக்கவும், அம்மாவுக்கு கீழ்ப்படியவும் சொன்னார் என்று அறிவுரையும் கூறு கிறாள்.

    இப்போது அந்தக் குழந்தை தன் தந்தையின் உருவத்தை கற்பனையாகக் கண்டு; அவர்தான் தனக்கு தேவையானதை அனுப்பிக்கொண்டிருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை பார்க்காமலேயே நம்பி; அவர் சொன்னதாக அம்மா கூறும் அறிவுரையை அப்படியே பின்பற்றினால், அதன் பெயர்தான் விசுவாசம்.

    மற்றொரு விசுவாசத்துக்கு உதாரணமாக, பெற்றோருடன் குழந்தை வளர்ந்து; தனக்காக தந்தை வாங்கி வருவதையெல்லாம் குழந்தை தன் கண்ணால் கண்டு; எல்லாவற்றையும் வாங்கித் தருவதால் அவர்தான் தந்தை என்று உணர்ந்து; அதனால் தந்தையின் கண்களுக்கு முன்பு கீழ்ப்படிதலாக குழந்தை நடந்துகொள்வதும் விசுவாசம்தான்.

    ஆனால், ‘கண்டு விசுவாசிப்பதைவிட காணாமல் விசுவாசிப்பதே பாக்கியம்’ என்று இயேசு நேரடியாகக் கூறியுள்ளார் (யோவான் 20:29). கண்டு விசுவாசிப்பதையும் அவர் தடுக்கவில்லை. கண்டு விசுவாசிக்கும் பிரிவினரிலும் தன் சித்தமுள்ளவர்களுக்கு அவர் உலக ரீதியான அற்புதங்களை செய்தார்.

    அதை வேதம் கூறும் ஒரு சம்பவத்தில் (யோவான் 4:47-53) காணலாம்.

    ‘இயேசுவை வெளியிடத்தில் ஒருவன் சந்தித்து, வீட்டில் மரணப்படுக்கையில் இருக்கும் தனது மகனை குணமாக்க வேண்டும் என்று கேட்கிறான். இயேசு அற்புதம் செய்து மகனுக்கு சுகம் கிடைத்தால், அதன் பிறகு குடும்பத்தோடு அவரை நம்பலாம் என்ற எண்ணத்தில் அந்த கோரிக்கையை வைக்கிறான்’.

    அவனது உள்ளத்தை அறிந்த இயேசு, ‘நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்க மாட்டீர்கள்’ என்றார். அப்படி கடிந்து கொண்டாலும் அற்புதமாக அவனது மகனை இயேசு குணமடையச் செய்கிறார்.

    ‘மகன் சுகமடைந்து விட்டான்’ என்று இயேசு சொன்னதும், அவன் வீட்டுக்குச் செல்கிறான். வழியில் அவனை அவனது வேலைக்காரர் சந்தித்து, ‘மகன் குணமாகிவிட்டான்’ என்றார்கள்.

    வீட்டில் மகன் குணமடைந்ததாக வேலைக்காரர் சொன்ன நேரத்தையும், குணமடைவதாக இயேசு சொன்ன நேரத்தையும் அவன் கணக்கிட்டான். அந்த இரண்டு நேரமும் ஒத்துப்போனதால் அது இயேசு செய்த அற்புதமாகத்தான் இருக்கும் என்று கருதி, இயேசுவை அவனும் அவனது குடும்பத்தினரும் விசுவாசித்தார்கள் என்று வேதம் கூறுகிறது.

    கணக்கிட்டு உருவாக்கப்படும் விசுவாசம், நாட்கள் செல்லச் செல்ல நீடிப்பது கடினம். வேறு பிரச்சினைகள் வந்து நெருக்கடி கொடுக்கும்போது, அதில் அற்புத விடுதலை கிடைக்காவிட்டால், விசுவாசம் நீர்த்துப்போகிறது.

    இந்த நேரத்தை சாத்தான் பயன்படுத்திக்கொள் கிறான். வேறு பல கருத்துகளை உட்புகுத்தி அவர்கள் மேற்கொண்ட கணக்கீட்டை தவறாக மதிப்பிடச் செய்கிறான்.

    ‘உன் மகன் மாத்திரை மருந்தினால் தான் குணமானான், ஆனால் நீ நேரத்தை தவறாகக் கணக்கிட்டு அது இயேசுவின் அற்புதம் என்று வீணாக விசுவாசிக்கிறாய்’ என்ற அவிசுவாச கருத்துகளையும் அவனது மனதில் சாத்தான் விதைக்கக் கூடும்.

    அற்புத அடையாளங்களை மனதில் வைத்துக்கொண்டு அற்புத கூட்டங்களை நோக்கி ஓடும் மக்கள் உலகம் முழுவதும் உள்ளனர். மற்றவர் களுக்கோ அல்லது தனக்கோ நடக்கும் அற்புதங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து விசுவாசத்தை உருவாக்கிக்கொள்வது தவறு.

    அற்புதம் என்பது, பக்தி வாழ்க்கைக்குள் செல்வதற்காக இறைசித்தமுள்ளவர்களுக்காக திறக்கப்படும் வாசல். எனவே அற்புதம் என்ற வாசலிலேயே நின்றுவிடாமல், அதன் வழியாகச் சென்று, ரட்சிப்பை அடைவதுதான் ஞானமாகும்.

    10 குஷ்டரோகிகளை குணமாக்கிய இயேசு, ஒருவனுக்கு மட்டுமே ரட்சிப்பு கிடைத்தது என்றார் (லூக்கா 17:19). ஏனென்றால், அந்த ஒருவன் மட்டும்தான் குஷ்டரோகம் சுகமானதுமே, இயேசுவை விசுவாசித்து அவரது போதனைகளை பின்பற்றுவதற்காக மீண்டும் அவரிடம் வந்தான்.

    அற்புத சுகம் பெற்ற மற்ற 9 பேருக்கும் இயேசுவின் மீது விசுவாசம் இருந்திருக்கும். ஆனால் அவர்கள் அற்புதத்தை கண்டதோடு நின்றுவிட்டனர். அப்படி நில்லாமல், இயேசுவின் வழியை பின்பற்றுவதற்கு முடிவு செய்ததுதான் உண்மையான விசுவாசம். அதுதான் அவனை ரட்சிப்பை நோக்கி அழைத்துச் சென்றது.

    ஆக, இயேசுவை பின்பற்றும் பக்தி மார்க்கத்துக்கு வர முடிவு செய்யாவிட்டால் நீங்கள் பெற்ற அற்புதங்கள் அனைத்துமே வீண்தான். உடல் இருக்கும்வரைதான் உடல் ரீதியாக நடந்த அற்புதமும் நீடிக்கும். பொய், பெருமை, பொறாமை போன்ற இயல்பு குணங்கள் நீங்கி; பகைப்பவனை நேசித்து; அடிக்கும் கைகளுக்கு மறுகன்னத்தை காட்டும் அளவுக்கு ஒருவன் மாற்றப்பட்டிருக்கிறான் என்றால், அதுதான் ரட்சிப்பு. இதைத்தான் நம்மிடம் இயேசு எதிர்பார்க்கிறார். வியாதி நீங்குவது போன்ற உடல் ரீதியான அற்புதங்களைவிட, இயல்பு குணங்களை நீக்கும் அளவுக்கான ஆத்ம ரட்சிப்பை நாடுங்கள். அப்படி இயல்பு நிலை மாறியிருந்தால், நீங்களே உங்களுக்கு அதிசயமாகத் தெரிவீர்கள்.

    அற்புத அதிசயத்தினால் மட்டும் இறைவனை விசுவாசிப்பது மற்றொரு ஆபத்தையும் வரவழைத்துவிடுகிறது. இவர்களின் விசுவாசத்தை, அதைவிட பெரிய அதிசய அற்புதங்களினால் வீழ்த்திவிட முடியும். அற்புத அதிசயத்தை சாத்தானும் செய்வான் (வெளி.16:14). இயேசு நிகழ்த்தியதுபோன்ற, நின்ற படியே விண்ணுக்கு ஏறுவது, தண்ணீரில் நடப்பது ஆகிய அதிசயங்கள் மனிதர்களாலும் இன்று நடத்தி காட்டப்படுகிறது. இறுதி நாட்களில் வானத்தில் இருந்து தீயை விழ வைக்கும் அளவுக்கான அற் புதங்களை சாத்தானும் நடத்துவான்(வெளி.13:13).

    எனவே அற்புத அதிசயங்களில் காட்டும் ஈடுபாட்டை விட்டுவிட்டு, உண்மையான பக்தியை அடைவதற்கு முதலில் முடிவு செய்வோம். நமது முடிவுக்கு ஏற்றபடி உண்மை பக்திக்கான வழியை இறைவன் நமக்கு திறந்து தருவார்.

    Next Story
    ×