தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய யூடியூபர் பாஜகவில் இணைந்தார்
- கடந்தாண்டு பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக புகார் எழுந்தன
- இது தொடர்பாக யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை பீகார் போலீசார் கைது செய்தனர்.
கடந்தாண்டு பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக புகார் எழுந்தன. இதுதொடர்பாக பல போலி வீடியோக்கள் வெளியானது. இது தொடர்பாக பீகார் சட்டசபையில் பாஜகவினர் பிரச்சினை கிளப்பினர்.
இந்த பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் பீகார் மாநில அரசுகள் ஒன்றிணைந்து குழுக்களை அமைத்து கடும் நடவடிக்கையில் இறங்கின. இதையடுத்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இது தொடர்பாக யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை பீகார் போலீசார் கைது செய்தனர். பீகாரை சேர்ந்த இவர் 4 ஆண்டுகளாக யூடியூப் சேனலில் அரசுகளுக்கு எதிராக தவறான கருத்துக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதற்காக அவருக்கு மாதம் ரூ.5 லட்சம் வரை வருவாய் கிடைத்துள்ளது.
பணம் சம்பாதிக்க தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோ காட்சிகளை தயாரித்துள்ளார். மணீஷின் சேனலில் 30 போலி வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
மணிஷ் காஷ்யப் மீது தமிழ்நாட்டிலும், பீகாரிலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ள யூடியூபர் மனீஷ் டெல்லியில் பாஜக எம்,.பி மனோஜ் திவாரி முன்னிலையில் காஷ்யாப் பாஜகவில் இணைந்துள்ளார்.
பாஜகவில் இணைந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய மணீஷ் காஷ்யப், "பாஜகவுடன் இணைந்து பீகாரை வலுப்படுத்துவேன். என் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் பாட்னா நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியது மட்டுமின்றி என்னை விடுதலையும் செய்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் என் மீது போடப்பட்ட வழக்கும் வாபஸ் பெறப்பட்டது. சனாதனத்தை அவதூறு செய்பவர்களுக்கும், தேசியவாதத்திற்கு எதிரானவர்களுக்கும் எதிரான எனது போராட்டம் தொடரும்" என்று அவர் தெரிவித்தார்.