search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்புக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை
    X

    டிரம்புக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை

    டிரம்பின் கடுமையான கருத்துக்கள் அமெரிக்காவுக்கு பேரழிவை கொண்டு வரும் என வடகோரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
    சியோல்:

    வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் என்பதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக உள்ளார். இது தொடர்பாக அவருக்கும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னுக்கும் இடையே தொடர் வார்த்தை யுத்தம் நடந்து வந்தது.

    இந்த நிலையில், வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிராக ஆசிய நாடுகளை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் டிரம்ப் அங்கு சுற்றுப்பயணம் தொடங்கி உள்ளார்.

    முதல் கட்டமாக ஜப்பான் சென்றுள்ள அவர் சென்ற உடனேயே வடகொரியாவை மறைமுகமாக சாடினார். அப்போது அவர், “எந்த சர்வாதிகாரியும், அமெரிக்காவை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது” என சாடினார்.



    டிரம்ப், நாளை (7-ந் தேதி) தென்கொரியா செல்லும் நிலையில், ஜப்பானில் இப்படி கருத்து வெளியிட்டிருப்பதற்கு வட கொரியா பதிலடி கொடுத்துள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க பாராளுமன்ற வெளியுறவு கமிட்டி தலைவர் பாப் கார்க்கர் மற்றும் முன்னாள் அதிகாரிகள், “அர்த்தமே இல்லாமல் டிரம்ப் வடகொரியாவுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தி வருகிறார்” என்று கூறியிருப்பதை மேற்கோள் காட்டி, வடகொரியாவின் ஆளுங்கட்சி நாளேடான ‘ரோடாங் சின்முன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

    மேலும் அதில், “அமெரிக்க ஜனாதிபதி முட்டாள்தனமாக கருத்துக்களை தெரிவிப்பதின் மூலமாக வடகொரியாவை தீவிரமாக தூண்டி விடுகிறார். வடகொரியாவின் கடுமையான விருப்பம் மற்றும் துணிச்சலான நடவடிக்கைகளை அமெரிக்கா தவறாக மதிப்பிட்டது என்றால், வடகொரியா அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி ஒரு உறுதியான மற்றும் இரக்கமற்ற தண்டனையை விதிக்க நேரிடும். அதை சமாளிக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்கா நிர்ப்பந்திக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

    மேலும், “டிரம்பின் கடுமையான கருத்துக்கள், அமெரிக்காவின் நிலப்பகுதிக்கு அணுசக்தி பேரழிவை கொண்டு வரக்கூடும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×