search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல நடந்த சதி முறியடிப்பு
    X

    வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல நடந்த சதி முறியடிப்பு

    வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை பாதுகாவலர்கள் மூலம் கொல்ல நடந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது. அவர் பதவியேற்ற அன்றில் இருந்து அவரை கொல்ல 11 தடவை சதி நடந்துள்ளது.
    டாக்கா:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது அலுவலக இல்லத்தில் தனது 2 பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    அதே பாணியில் வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல சதி நடந்தது. ஷேக் ஹசீனாவுக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்களில் 6 முதல் 7 பேர் மூலம் டாக்காவில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சுட்டுக்கொல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அலுவலக பணியில் மூழ்கியிருக்கும் அவரது கவனத்தையும் விசுவாசமான பாதுகாப்பு படையினரின் கவனத்தையும் திசை திருப்பி கொலை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.

    ஆனால் அவர்களின் கொலை சதி முறியடிக்கப்பட்டது.  இச்சம்பவம் கடந்தமாதம் (ஆகஸ்டு) 24-ந்தேதி நடந்தது. இச்சதியை ஜமாத்-உல்-முஜாகிதீன் வங்காளதேசம் என்ற தீவிரவாத அமைப்பின் மூலம் செயல்படுத்த  திட்டமிட்டிருந்தனர்.

    இந்த சதி செயலை இந்தியா- வங்காள தேச உளவுத் துறையினர் தீவிரவாதிகள் மற்றும் ஹசீனாவுக்கு எதிரான பாதுகாவலர்களின் டெலிபோன் உரையாடல் மூலம் கண்டு பிடித்து தடுத்து நிறுத்தினர்.

    தற்போது இச்சதியில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடித்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதற்காக சந்தேகப்படும் நபர்கள் அனைவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    மேலும் இச்சதி செயலில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பும் ஈடுபட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

    ஏனெனில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு வங்காள தேச எதிர்க்கட்சி தலைவர் கலிதா ஜியாவை பாகிஸ்தான்  ‘ஐ.எஸ்.ஐ.’ உயர் அதிகாரி பிரிகேடியர் அஷ்பாப் சந்தித்தார்.

    வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசீனா கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரியில் பதவி ஏற்றார். அன்றில் இருந்து அவரை கொல்ல 11 தடவை சதி நடந்துள்ளது. அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டது.
    Next Story
    ×