search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கலூர் அருகே கலர் ஜெராக்ஸ் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய 2 வாலிபர்கள் கைது
    X

    பொங்கலூர் அருகே கலர் ஜெராக்ஸ் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய 2 வாலிபர்கள் கைது

    பல்லடம் அருகே கலர் ஜெராக்ஸ் நோட்டு கொடுத்து ஆடு வாங்கிய 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து 60 ஆயிரம் கலர் ஜெராக்ஸ் நோட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கோவில் பாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. விவசாயி. இவர் ஆடு, மாடு வளர்த்து வருகிறார்.

    இவரது வீட்டிற்கு நேற்று மதியம் 2 வாலிபர்கள் காரில் வந்தனர். காரில் இருந்து இறங்கிய அவர்கள் வேலுச்சாமியிடம் சென்று தங்களுக்கு ஆடு வேண்டும் என கேட்டனர். அவரும் கொடுக்க சம்மதித்தார்.

    முதலில் 10 ஆடு வேண்டும் என கேட்ட அவர்கள் பின்னர் 6 ஆடு மட்டும் போதும் என்றனர். அதன் படி ஒரு ஆட்டுக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் 6 ஆட்டிற்கு ரூ. 30 ஆயிரம் தர வேண்டும் என வேலுச்சாமி கூறினார்.

    பேச்சு வார்த்தையின் முடிவில் 6 ஆட்டிற்கும் ரூ. 28 ஆயிரம் தருவதாக வாலிபர்கள் கூறினர். அதன் படி வேலுச்சாமியிடம் 28 ஆயிரத்திற்கு ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை கொடுத்தனர்.

    அதனை வேலுச்சாமி வாங்கி கொண்டு பக்கத்து தோட்டத்தில் உள்ள தனது உறவினரிடம் கொடுத்து எண்ணும் படி கூறினார். அவர் எண்ணிய போது 14 நோட்டுக்களும் ஒரே வரிசை எண்ணில் இருந்தது தெரிய வந்தது.

    மேலும் அவை உண்மையான ரூபாய் நோட்டுக்கள் அல்ல. கலர் ஜெராக்ஸ் நோட்டுக்கள் என்பதும்தெரிய வந்தது.

    இதனால் வேலுச்சாமி அதிர்ச்சி அடைந்தார். அவர் ஓடி சென்று கார் சாவியை பிடுங்கி கொண்டு சத்தம் போட்டார்.  உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் வாலிபர்கள் 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் கோவில்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 வாலிபர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    விசாரணையில் அவர்கள் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த வீராசாமி மகன் கார்த்திக் (30), நாகராஜ் மகன் சங்கர் (31) என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் சரவணம் பட்டியில் மட்டன் கடை நடத்தி வருகிறார்கள்.

    இவர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரம் கலர் ஜெராக்ஸ் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செலக்கரிச்சல் மற்றும் அன்னூர் பகுதியில் கள்ள ஜெராக்ஸ் நோட்டு கொடுத்து ஆடு வாங்கிய சம்பவம் ஏற்கனவே நடைபெற்று உள்ளது. இந்த சம்பவத்தில் தற்போது பிடிபட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஏழை விவசாயிகளை குறி வைத்து கலர் ஜெராக்ஸ் நோட்டு கொடுத்து ஆடு வாங்கிய சம்பவம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×