search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலம் அருகே 2 வீடுகளில் புகுந்து பெண்களை தாக்கி நகை-பணம் கொள்ளை
    X

    மயிலம் அருகே 2 வீடுகளில் புகுந்து பெண்களை தாக்கி நகை-பணம் கொள்ளை

    2 வீடுகளில் புகுந்து பெண்களை தாக்கி முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ளது பொம்பூர் கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 60). பா.ம.க. பிரமுகர். இவரது மனைவி மகேஸ்வரி (55).

    இவரது வீட்டின் ஒரு பகுதியில் விஜயலட்சுமி (50) என்பவர் துணி தைக்கும் (டெய்லர்) பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு ரங்கநாதன், அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு 2 மணி அளவில் 4 பேர் வீட்டின் பின்புற கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் கறுப்புநிற முகமூடி அணிந்திருந்தனர். கறுப்புநிற பனியனும், டவுசரும் அணிந்திருந்தனர்.

    அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்த போது ஏற்பட்ட சத்தம் கேட்டு மகேஸ்வரி திடுக் கிட்டு எழுந்தார். வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்களை பார்த்து கூச்சலிட முயன்றார். கொள்ளையர்கள் உடனே மகேஸ்வரியை தாக்கி அவரது கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் குத்தி விடுவோம் என்று மிரட்டினர்.

    பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கு தூங்கி கொண்டிருந்த விஜயலட்சுமியையும் தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

    இதையடுத்து அந்த கொள்ளையர்கள் அருகில் உள்ள ஆண்டாள் (70) என்பவரது வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த பொருட்கள் மற்றும் பத்திரங்களை எடுத்து கீழே வீசினர்.

    பீரோவில் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் நகையை கொள்ளையடித்தனர். சத்தம் கேட்டு ஆண்டாள் திடுக்கிட்டு எழுந்தார். உடனே கொள்ளையர்கள் ஆண்டாளையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து மயிலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பால்சுதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கொள்ளை நடந்த 2 வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    2 வீடுகளில் புகுந்து பெண்களை தாக்கி முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×