search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறந்தாங்கி அருகே காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    அறந்தாங்கி அருகே காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை

    அறந்தாங்கி அருகே திருமணம் தாமதம் ஆனதால் மனமுடைந்த காதலர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த வல்லவாரி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் பாரதி (வயது 22), வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊரான வல்லவாரிக்கு வந்திருந்தார். பாரதியும் அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணான ராமச்சந்திரன் மகள் கண்ணாத்தாள் (16) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

    பாரதி தனக்கு, கண்ணாத்தாளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என பெண் வீட்டில் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் கண்ணாத்தாளின் அக்காவிற்கு திருமணம் முடிந்த பின்பு தான் 2-வது பெண்ணான கண்ணாத்தாளுக்கு திருமணம் செய்ய முடியும் எனக்கூறியுள்ளனர்.

    இதற்கிடையே நேற்று அப்பகுதியில் நிகழ்ந்த துக்க நிகழ்விற்காக பாரதியின் வீட்டில் இருந்தவர்கள் சென்று விட்டனர். இதை அடுத்து கண்ணத்தாள் பாரதி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது காதலர்கள் தங்கள் திருமணம் தள்ளிப்போவதை எண்ணி இருவரும் மனமுடைந்தனர்.

    உடனே அவர்கள் வயலில் தெளிக்கப்படும் குருணை மருந்தை எடுத்து அருந்தி உள்ளனர். வி‌ஷமருந்து குடித்ததால் மயக்கம் அடைந்த 2 பேரையும் அவர்களது உறவினர்கள் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் காதலர்கள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். அறந்தாங்கி அருகே காதலர்கள் வி‌ஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×