search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: போலீஸ் காவல் முடிந்து 2 பேர் கேரள சிறையில் அடைப்பு
    X

    கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: போலீஸ் காவல் முடிந்து 2 பேர் கேரள சிறையில் அடைப்பு

    கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் போலீஸ் காவல் முடிந்து கேரள சிறையில் அடைக்கப்பட்டனர்.
    ஊட்டி:

    கொடநாடு காவலாளி கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி ஆகிய 2 பேரும் கேரளாவில் ஏற்கனவே ஒரு வழக்கில் கைதாகி மஞ்சேரி சிறையில் இருந்தனர்.

    இதனால் இருவரிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் கேரள கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி இருவரையும் பலத்த பாதுகாப்புடன் தனிப்படையினர் கோத்தகிரிக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 3 நாள் காவலில் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது,

    பின்னர் போலீசார் ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி ஆகியோரை கொடநாடு பங்களாவுக்கு அழைத்து வந்தனர். அவர்கள் சம்பவம் பற்றி நடித்து காட்டினர். மேலும் அவர்களது செல்போன் எண் குறித்தும் விசாரணை நடந்தது.

    இந்த நிலையில் போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்ததையடுத்து அவர்கள் 2 பேரும் கோத்தகிரி கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீதர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    பின்னர் இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கேரள மாநிலம் மஞ்சேரி சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே ஜிதீன் ஜாய், ஜம்சீர் அலி ஆகியோரை கொட நாடு கொலை வழக்கு தொடர்பாக கோவை சிறையில் அடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தனிப்படை போலீசார் எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×